சேலம் மரவனேரியில் சங்கரமடத்தை முற்றுகையிட முயன்ற திவிகவினர் கைது
சேலம் மரவனேரியில் உள்ள சங்கர மடத்தை முற்றுகையிட முயற்சித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் : தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தமைக்கு விஜயேந்திரர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி சேலம் மரவனேரியில் உள்ள சங்கர மடத்தை முற்றுகையிட முயன்ற போது திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மியூசிக் அகாதெமியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்சாரிலால் புரோஹித், காஞ்சி இளைய மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உள்ளிட்டோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தியபோதும் விஜயேந்திரர் மட்டும் எழுந்திருக்காமல் உட்கார்ந்தபடியே இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் தமிழ்த் தாயை அவமதித்துவிட்டதாக கூறியும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழ் அமைப்புகள் காஞ்சி சங்கர மடத்தை முற்றுகையிடவுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள சங்கர மடத்தை தமிழ்த் தேசிய முன்னணி அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில் சேலம் மரவனேரியில் உள்ள சங்கரமடத்தை முற்றுகையிட திராவிடர் விடுதலை கழகத்தினர் முயற்சித்தபோது அவர்களை போலீஸார் கைது செய்தனர்.