திராவிட கட்சிகளை அழிக்க கருணாநிதியும், வைகோவும் போதும்… போட்டுத் தாக்கும் பொன்னார்
சென்னை: தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகளை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை. கருணாநிதியும், வைகோவுமே திராவிடக் கட்சிகளை அழித்துவிடுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது:
எத்தனை பிரளயங்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என கருணாநிதி இல்ல திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருக்கிறார். இதேபோல கருணாநிதியும் திராவிடக்கட்சிகளை சிலர் அழிக்க முயற்சி செய்வதாகவும், யாராலும் திராவிட கட்சிகளை அழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
அவர்கள் கூறியிருப்பது உண்மைதான். திராவிட இயக்கத்தை வெளியிலிருந்து வந்து யாரும் அழிக்க தேவையில்லை. அங்கு இருக்கும் கருணாநிதியும், வைகோவுமே அந்தப் பணியை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
ஆர்.கே.நகரில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்ள வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் ஒன்று சேரும் என்று சொல்வது ஏற்புடையது இல்லை. பொதுப் பிரச்னைகளில் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகும். அதனைதான் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் வெளிப்படுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் எனது கருத்து என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்..