ஜாதி கொலை, தமிழ் புறக்கணிப்பு.. திராவிட கட்சிகளின் வீழ்ச்சி தொடங்கி விட்டது: இல.கணேசன் ஆரூடம்
சென்னை: தமிழகத்தில் திராவிட கட்சிகளின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இல.கணேசன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: தமிழ் மொழியை வளர்ப்போம், ஜாதி வேறுபாட்டை ஒழிப்போம் என்பதெல்லாம் திராவிட கட்சிகளின் கோஷமாக இருந்தது.
ஆனால், தமிழகத்தில் தமிழ் தற்போது மெல்ல, மெல்ல அழிந்துவருகிறது. எங்கும் ஆங்கிலமயமாக காட்சியளிக்கிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஜாதி கொடுமைகளை வளர்த்துவிட்டுள்ளன.
பல்வேறு உதாரணங்களை கூற முடியும் என்றாலும் சமீபத்திய உதாரணம், உடுமலையில் நடைபெற்ற கொலை சம்பவமாகும். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் வீழ்ச்சிக்கு தொடக்க புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
கல்லூரி மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் பாஜகவை நோக்கி பெரும்பான்மையாக வருகிறார்கள்.
நான் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்துள்ளேன். ஜாதி பார்க்காதே, ஜாதி பற்றி பேசாதே என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை. நாடுதான் முதல் என நினைத்தால், ஜாதி பற்றிய எண்ணம் வராது.
தற்கொலை செய்துகொள்வதும், கொலை செய்வதும் தமிழகத்தில் சகஜமாக நடைபெறுகிறது. தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த கல்வி நிலையங்கள் முயல வேண்டும். தற்கொலை செய்வது வீரம் இல்லை, கோழைத்தனம். இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.