நீங்க மதுக்கடையை மூட சொன்னா திறக்க சொல்லி நாங்க போராடுவோம்... கோதாவில் குதிக்கும் குடிகாரர்கள்
அரசு மதுக்கடைகளை மூடினால் திறக்கச்சொல்லி போராட்டத்தில் ஈடுபடுவோம் என குடிகார்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
திண்டுக்கல்: மூடப்பட்ட மதுக்கடைகளை உடனடியாக திறக்க வேண்டும் என குடிகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மதுக்கடைகளை மூடினால் திறக்கச்சொல்லி போராட்டத்தில் ஈடுபடுவோம் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை கடந்த 31ஆம் தேதியுடன் மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதனால் திறந்திருக்கம் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று குடிமகன்கள் சரக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் திறக்க வேண்டும்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் உள்ள குடிகாரர்கள் சங்கத் தலைவர் முத்துச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குடிகாரர்கள் சிரமப்படாத வகையில் வழக்கம் போல் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அதிக விலைக்கு விற்பனை
அவர் மேலும் பேசியதாவது, 'கடைகள் குறைவாக இருப்பதால் அந்த கடைகளில் குடிமகன்கள் அதிகமாக போய் சரக்கு வாங்கி வருவதை கண்டு ஒரு குவாட்டருக்கு பத்து ரூபாய் முதல் பதினைந்து ரூபாய் வரை கூடுதலாக வாங்குகிறார்கள். அதுபோல் ஊர் ஊருக்கு இருந்த டாஸ்மாக் கடைகளில் இருந்த பார்களிலேயே சில்லிங் போட்டுக் கொண்டு ஒரு குவாட்டருக்கு 40ரூபாய் முதல் 50ரூபாய் வரை கூடுதலாக எங்கள் குடிமக்களிடம் பகல் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதை முதலில் அதிகாரிகள் தடுத்து வழக்கம்போல் குவாட்டருக்கு உண்டான பணத்தை டாஸ்மாக் கடைகளில் வாங்க சொல்ல வேண்டும். அதுபோல் சில்லிங் போட்டு கொண்டு குடிமக்களிடம் பகல் பகல் கொள்ளை அடித்து வருபவர்கள் மீது அதிகாரிகளும், போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எப்போதும் போல் குடித்துக்கொள்கிறோம்
இல்லையென்றால் வழக்கம்போல் கடைகளை திறந்துவிடுங்க. அந்தந்த பகுதிகளில் எப்பொழுதும் போல் எங்கள் குடிமகன்கள் குடித்து கொள்வார்கள். இதில் ஏதாவது அரசும், அதிகாரிகளும் மெத்தன போக்கை கடைபிடித்து வந்தால் கூடிய விரைவில் குடிமகன்கள் சங்கமும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
போராட்டத்தில் குதிப்போம்
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குடிமக்களை ஒன்று திரட்டி டாஸ்மாக் கடைகளை பொதுமக்கள் மூடச்சொல்லி எப்படி போராட்டத்தில் குதித்து வருகிறார்களோ அதுபோல் நாங்களும், டாஸ்மாக் கடைகளை திறக்க சொல்லி போராட்டத்தில் குதிப்போம் என்று கூறினார்.