டாஸ்மாக் கடைகள் மூடல்: பெரும் தவிப்பிலும், அதிர்ச்சியிலும் குடிகாரர்கள்!
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த 3000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிகாரர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
திண்டுக்கல்: தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த 3000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிகாரர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். கிடைக்கும் ஒரு சில இடங்களிலும் சரக்கு அதிக விலைக்கு விற்கப்படுதால் குடிகாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. சில மதுக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதிக விலைக்கு விற்பனை
இந்நிலையில் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கடைகளுக்கு வெளியே வைத்து அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 31 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
குடிகாரர்கள் அவதி
ஆனால் தாடிகம்பு சாலையில் உள்ள கடைகளுக்கு வெளியே வைத்து மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிகார்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் நெரிசல்
இதேபோல சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள 6 கடைகளில் 5 கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஒரே கடையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாக குடிகாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பதுக்கிவைத்துள்ள வியாபாரிகள்
வியாபாரிகளுக்கு அதிக பாட்டில்கள் விற்றுவிடுவதால் தங்களுக்கு மது பாட்டில்கள் கிடைப்பதில்லை என்றும் குடிகாரர்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் கூடுதல் விலை வைத்து விற்பதற்காக வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சரக்குகளை தங்களின் வீடுகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
குடிகாரர்கள் வேதனை
அதிக விலை கொடுத்து வாங்க முடியாததால் குடிகாரர்கள் செய்வறியாமல் திணறி வருகின்றனர். மதுக்கடைகள் திடீரென முடப்பட்டதால் தாங்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளதாகவும் குடிகாரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.