140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. சென்னைக்கு வழங்கும் குடிநீர் பாதியாகக் குறைப்பு.. மக்கள் கடும் அவதி
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் சென்னைக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் சென்னைக்கு வழங்கும் குடிநீரின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முக்கியமானவை. அங்கிருந்துதான் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏரிகளில் இருந்து கிடைக்கும் நீரில் இருந்து ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர், சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
சென்னைக்கு பாதியாக குறைந்த குடிநீர்
இந்த நீரின் அளவு தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை சென்னை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பூண்டி, புழல், சோழாவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரியும் காய்ந்து கிடப்பதால் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
3 நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்
அதுமட்டுமல்லாமல் சென்னையின் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 300 லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்படுகிறது.
காய்ந்த வீராணம்
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வருவதும் முற்றுலும் நின்றுவிட்டது. அதற்கான குழாய்கள் காய்ந்தே கிடக்கின்றன. இந்நிலையில், பல்வேறு இடங்களில் இருந்து நீரை உறிஞ்சி இந்தக் குழாய்களின் வழியே சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் அனுப்பப்பட்டு வருகிறது.
கல்குவாரி நீர்
இதுதவிர காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு அது சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீரும் சென்னைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
முறையாக பராமரித்தால்..
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை முறையாக பராமரித்தால் சென்னைக்கு தண்ணீர் பஞ்சமே வராது. ஆனால் அதனை அரசு செய்வதே இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.