காட்டுமன்னார்கோயிலில் கடும் குடிநீர் பஞ்சம்... காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
காட்டுமன்னார்கோயிலில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குடிக்கக் கூட நீர் இல்லாததால் பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்: கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாமல் தமிழகத்தின் முக்கிய ஏரிகள் அனைத்து காய்ந்து கிடக்கின்றன.
கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பஞ்சம் தமிழக மக்களை தற்போது பாடாய் படுத்தி வருகிறது.
காலிக் குடங்களுடன்...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள எய்யலூர் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த பெண்கள் காலிக் குடங்களுடன் காட்டுமன்னார்கோயில் - சிறுகாட்டூர் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கால்நடைகளுடன்...
இதே போன்று தர்மபுரியிலும் கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் தங்களின் கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் வேலூர் பிரதான சாலையில் கால் நடைகளுடன் ஒன்று கூடிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குமுறல்
அப்போது பேசிய பெண்கள், குடிநீரை கொண்டு வருவதற்கு 2 கிமீ தூரத்திற்கு செல்வதாகவும், இதனால் பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று குற்றம்சாட்டினார்கள். மேலும் இந்த ஜனவரியில் தொடங்கிய குடிநீர் பிரச்சனை தற்போது பூதாகரமாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.
சாலை மறியல்
இதனைப் போன்றே விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. குடிக்கவும் நீர் கிடைக்கவில்லை என்பதால் புதுச்சேரி கிருஷ்ணகிரி சாலையில் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக அளித்த உறுதிமொழிக்கு பின்னர் போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர்.