செங்கோட்டை அருகே லாரி ஏற்றி 6 பேரைக் கொன்ற கொலைகார டிரைவர் கைது
செங்கோட்டை: செங்கோட்டை அருகே லாரி கொண்டு ஆட்டோ மீது மோதி 6 பேரை கொன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த லாரி டிரைவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
செங்கோட்டை அருகே தமிழக - கேரளா எல்லை பகுதியான திருமங்கலம்-கொல்லம் தேசீய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷேர் ஆட்டோ ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதலில் விபத்தாக கருதப்பட்ட இந்த சம்பவம் பின்னர் திட்டமிடப்பட்ட கொலை எனத் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் திருமலைக்குமாரையும் போலீசார் தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையின் போது பல திடுக்கிடும் விவரங்கள் தெரிய வந்துள்ளது. அதாவது காளி என்பரது தலைமையில் ஒரு அணியாகவும்,ஹரிஹரன் தலைமையில் ஒரு அணியாகவும் கற்குடிப் பகுதியில் குளங்கள் குத்தகைக்கு எடுப்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டது தெரிய வந்தது. அதில், கடந்த சிலமாதங்களுக்கு முன் நடந்த ஏலத்தில் திருமலைகுமார் அப்பா காளியும் கலந்துக்கொண்டுள்ளார். ஆனால், அந்த குளத்தை ஹரிஹரன் தரப்பு ஏலம் எடுத்துள்ளது. இதனால், இருதரப்பிற்கும் இடையே பகை உருவானது.
இந்தப் பகையின் காரணமாக கடந்த மாதம் காளி தரப்பினர் ஹரிஹரன் தரப்பினர் ஏலம் எடுத்த குளத்தில் விஷம் வைத்து மீன்களை கொன்றுள்ளனர். இது தொடர்பாக புளியரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புளியரை காவல் நிலையத்திற்கு நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போட சென்ற ஹரிகரன் தரப்பை சார்ந்த அடிவெட்டி, அவரது மகேஷ் ஆகியோரை குறிவைத்து கொலை செய்ய காளி தரப்பு முடிவு செய்து அவரது தலைமையில் அவரது மகன் திருமலைகுமார் மற்றும் உதையகுமார்,மகேஷ் ,முருகன்,சங்கிலி,சங்கிலி மனைவி மாரியம்மாள்,சங்கிலி மகன்கள் பாலகிருஷ்ணன்,முருகன்,கோட்டூர் சாமி,மரிதுரை,மகேஷ்,கோட்டுர்சாமி,நவாஸ்கான் ஆகியோர் ஓன்று கூடி சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட போகும் போது லாரியை வைத்தே இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி விபத்து போன்று காட்ட முயற்சி மேற்கொண்டு தனியாக வரைப்படங்கள் தயாரித்து உள்ளனர். அதன் படி கடந்த 10ஆம் தேதி ஆட்டோவில் சென்று 3 பேர்களை கொல்ல காளி தலைமையில் தகவல் சொல்ல திருமலைகுமார் லாரியை ஓட்ட அதில் உதயகுமார்,கோட்டூர் சாமி ஆகியோர் அரிவாளோடு சென்றும் ஆட்டோ மீது பயங்கரமாக மோதி கொலை செய்துள்ளனர்.
அனால் ஆட்டோவில் தற்செயலாக சாமி கும்பிட சென்ற இசக்கி,கணக்கு,முருகன் ஆகிய 3 பெரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் திருமலைகுமார் விபத்து என்று கூறி செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் சென்றுள்ளார். இந்நிலையில் 12ந் தேதி கோட்டூர் சாமி,மாரித்துரை ஆகியோரை கைது செய்து எதிரிகள் பயன் படுத்திய வரைபடங்களை கைப்பற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குற்றவாளி திருமலைகுமாரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை செங்கோட்டை நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய லாரியை பறிமுதல் செய்து வழக்கில் தொடர்புடைய பலரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.