ஊட்டி மலைப் பாதையில் 'ஹார்ட் அட்டாக்'... 110 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பஸ் டிரைவர்!
உதகமண்டலம்: மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் ஓட்டிவந்த பேருந்தை பத்திரமாக நிறுத்தி 110 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ளார் ஒரு டிரைவர். அவரது கடமையுணர்வை உயிர் தப்பிய பயணிகள் போற்றி புகழ்ந்துள்ளனர்.
உயிரிழந்த பஸ் டிரைவர் பெயர் அப்துல் ரஹ்மான்(45) இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் சுமார் 110 பயணிகளுடன் இன்று காலை உதகமண்டலம் நோக்கி மலைப்பாதை வழியாக வந்துக் கொண்டிருந்தது.
ஊட்டியை நெருங்க சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் அப்துல் ரஹ்மானுக்கு திடீரென்று நெஞ்சுவலித்தது. சில வினாடிகளில் அவருக்கு வியர்த்துக் கொட்டியது.
பேருந்தை கட்டுப்படுத்தும் அவரது முயற்சியையும் மீறி சாலையின் குறுக்கே அந்த பேருந்து இருமுறை அலைபாய தொடங்கியது.
இனியும், பேருந்தை முன்நோக்கி ஓட்டிச் சென்றால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்துக் கொண்ட அப்துல் ரஹ்மான்(45) நீலக்கோட்டை என்ற இடத்தில் சாலையின் பக்கவாட்டு சுவரின் மீது சக்கரத்தை ஏற்றி பேருந்தை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு ‘ஸ்டியரிங்' மீது சுருண்டு விழுந்தார்.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த வழியாக வந்த வாகனத்தில் டிரைவரை ஏற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அப்துல் ரஹ்மானின் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர்.
ஆபத்து நிறைந்த அந்த மலைப்பாதையில், வேகமாக ஓடும் பேருந்தை வெகு சாதுர்யமாக அப்துல் ரஹ்மான் ஓரங்கட்டி நிறுத்தியிருக்காவிட்டால், பக்கவாட்டில் உள்ள மிகப்பெரிய பாதாளத்தில் பேருந்து விழுந்திருக்கக் கூடும் என அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர்.
மரணிக்கும் தருவாயிலும் 110 பேரின் உயிரைக் காப்பாற்றிய டிரைவரைப் பற்றி பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.