For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடலை வருத்தி வேலை செய்கிறோம்... வைரலாகும் அரசு பஸ் டிரைவரின் கடிதம்

நாங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை செய்யவில்லை. உடலை வருத்தி வேலை செய்தோம், நல்லநாள் கூட பிள்ளைகளோடு இல்லாமல் என்று கண்ணீரோடு கடிதம் எழுதியுள்ளார் ஒரு ஓட்டுநர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் நீடிக்கிறது. கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர் தொழிற்சங்க நிர்வாகிகள். அரசு ஓட்டுநர் எழுதிய கடிதம் ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாகிறது.

ஐயா, திரு. விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே..

நான் கடந்த 35வருடங்களாக போக்குவரத்து துறையில் டிரைவராக பணியாற்றி, இன்று ஓய்வு பெற்றுவிட்டேன்.
பல நாட்கள் அந்த இன்ஜின் வேலை செய்தது இன்று உடலளவில் தளர்ந்து விட்டேன்.

Driver writes TN transport minister Viral in social media

ஒருநாள் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக் கொண்டு வண்டியை கட்டுபாட்டில் வைத்து ஓரம் கட்டினேன்.

உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடு தான் என் பணியை செய்தேன். இதற்கு நான் உங்களிடம் எதிர்பார்த்தது,என் சம்பளத்தில் மாதா மாதம் பிடித்த பி.எப் தொகையும், விடுமுறை பணமும், ஓய்வு பணமும் தான்.

நான் ஓய்வு பெற்று இரண்டு வருடம் ஆகின்றது. இன்றுவரை ஒரு ரூபாய் கூட என்னால் வாங்க இயலவில்லை உங்களிடம்.

அந்த பணத்தை நம்பிதான் என் மகளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தேன். பின்புதான் தெரிந்தது கடந்த ஆறு வருடமாக யாருக்கும் பணத்தை நீங்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று. என்னை போல் நிறைய பேர் உங்களிடம் பணத்தை பெற போராடி கொண்டிருக்கின்றனர்.

மாதா மாதம் பென்சன் வழங்க என் சம்பளத்தில் பணத்தை பிடித்தீர்கள். அதையும் மாதம் இரண்டு தவணையாக வழங்கினீர்கள். சில மாதம் முன்பு அதையும் நிறுத்தி விட்டீர்கள். அதன்பிறகு கோர்ட் உத்தரவின் படி மீண்டும் தவணை முறையில் பெறுகிறோம்.

முன்பு மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று அடுத்த வேளை உணவை பற்றி யோசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.

நாங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை செய்யவில்லை. உடலை வருத்தி வேலை செய்தோம், நல்லநாள் கூட பிள்ளைகளோடு இல்லாமல்.

எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து ஓய்வு பெற்ற பின் வழங்குகின்றோம் என்று கூறிய தொகையை என்ன செய்தீர்கள்.

நீங்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் கூத்தடிக்கவும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் வழங்கவும் என் வியர்வையும், ரத்தமும் தான் உங்களுக்கு கிடைத்ததா. உங்கள் மனைவியும், பிள்ளைகளும் காரில் பவனி வர எங்கள் மனைவி, பிள்ளைகள் சாக வேண்டுமா.

தயவு செய்து அறிக்கை விடாமல் எங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்த்து வையுங்கள்...

இதை படிப்போர் ஒரு தந்தைக்கு செய்யும் உதவியாக, இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றேன். உங்கள் தயவால் எங்கள் பிஎஃப் பணமாவது கிடைத்தால் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

இப்படிக்கு

அப்பாவி அரசு ஓட்டுனர்

English summary
Driver writes TN transport minister Viral in social media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X