நெடுவாசல் போராட்டக்குழுவுடன் டிஆர்ஓ பேச்சுவார்த்தை - ஆட்சியரிடம் பேச அழைப்பு
நெடுவாசல் போராட்டக்குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியரிடம் பேச வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் போராட்டக்குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை எதிர்த்து கடந்த 16 நாட்களாக கிராம மக்கள் போராடி வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. போராட்டம் முடிவுக்கு வருமா? தொடருமா என்பது பற்றி இன்று முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கிராம மக்களும், மாணவர்களும் போராட்ட களத்தில் குவிந்து வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனினும் மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே திட்டத்தைக் கைவிடுவோம் என்று நெடுவாசல் கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி தலைமையில் நெடுவாசல் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது ஏடிஎஸ்பி தங்கத்துரையும் பங்கேற்றார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டக்குழுவினர் அவர்களுடைய கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக எழுதித்தருமாறு வலியுறுத்தியதாக கிராம மக்கள் கூறினர். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை போராட்டக்களத்தில் இருந்து வெளியேற்றவும் கோரிக்கை வைத்தாக கூறினார். நெடுவாசல் போராட்டம் விரைவில் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.