அதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்.. பாத்ரூம் செல்ல முடியாமல் பெண்கள் அவதி
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி நகரில் ட்ரோன் மூலம் மக்களை கண்காணிக்கிறது காவல்துறை.
ஸ்டெர்லைட் என்ற கார்பொரேட் நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் வரிசையாக சுட்டு தள்ளியதில், 13 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த மக்கள் அவ்வப்போது, பெட்ரோல் குண்டுகளை வீசி காவல்துறை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் தூத்துக்குடியில் பதற்றம் தீரவில்லை.
உணவுக்கும் கஷ்டம்
இதையடுத்து கமாண்டோ படை குவிக்கப்பட்டு, தூத்துக்குடி நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது காவல்துறை. தூத்துக்குடி தனித்தீவாக மாறி உணவுக்கும் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இணையதள சேவை துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். தூத்துக்குடியை ஏதோ காஷ்மீர் போல மாற்றும் முயற்சி நடந்து கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ட்ரோன் காமிராக்கள் மூலம் மக்களை கண்காணிக்கும் பணியை போலீஸ் ஆரம்பித்துள்ளது.
வானில் ட்ரோன்கள்
வானில் ட்ரோன்களை பறக்கவிட்டு ஒவ்வொரு வீதிகளையும், தெருக்களையும் போலீசார் மானிட்டரில் கண்காணிக்கிறார்கள். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்கிறார்கள், மாந்தநேயர்கள். இதற்கு காரணம், வீட்டுக்கு வெளியே வரும் பெண்களையும் கூட இந்த கேமராக்கள் கண்காணிக்க முடியும் என்பதுதான்.
பாத்ரூம், கழிவறை
தென் மாவட்டங்களில் பல வீடுகளில் பாத்ரூம் மேற்கூரை கிடையாது. பெண்கள் குளிப்பது, கழிவறைக்கு செல்வதையும் இந்த கேமராக்கள் லைவாக படம் எடுத்து அனுப்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவு, 509ன்கீழ், பெண்களின் மாண்பை குலைக்கும் செயல் (Insult the modesty of a woman) தண்டனைக்குரிய குற்றமாகும்.
இணையம் கட்
இணையத்தை கட் செய்து தனி மனித உரிமையில் அடி விழ வைத்த அரசு அடுத்ததாக ட்ரோன்கள் மூலம் மேலேயிருந்து வீடுகளுக்குள் நடப்பதையும் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லையில் பயன்படுத்துவது
பொதுவாக இதுபோன்ற ட்ரோன்களை பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது. தீவிரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை கொல்வதற்கு ட்ரோன்கள் பயன்படும். ஆனால் சொந்த நாட்டுக்குள், உழைத்து சாப்பிடும் மக்கள் உள்ள பகுதிகளில் இதுபோன்ற கேமராக்களை பறக்கவிட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.