காய்கறிகள் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைவு : விலை கிடைக்காததால் ரோட்டில் கொட்டிச் செல்லும் அவலம்
தமிழகம் முழுவதும் காய்கறி உற்பத்தி அதிகரித்து உள்ளதால் விலை மிகவும் குறைந்துள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி உற்பத்தி தற்போது நல்ல நிலையில் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் காய்கறிகளை ரோட்டில் கொட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் இந்தாண்டு விளைந்த உளுந்து, பாசிப்பயிறு, மக்காசோளம், மிளகாய் போன்ற மானவரி பயிர்களுக்கு சந்தையில் விலை இல்லாததால் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது போல் அப்பகுதியில் விளைந்த தக்காளி, புடலங்காய், கத்தரிக்காய், மிளகாய், சுரைக்காய் போன்ற பல்வேறு காய்கறிகளுக்கு மார்க்கெட்டில் போதிய கொள்முதல் விலை இல்லை.
பெரும்பாலான காய்கறிகள் கி்லோ ரூ.5க்கும், ரூ.8க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை கட்டுபடியாகாது என்பதால் விவசாயிகள் காய்கறிகளை ரோட்டில் கொட்டி வருகின்றனர்.
பருவமழை இனி ஜூன் மாதம் தான் தொடங்கும். காய்கறி சாகுபடிக்கு தற்போது அதிக தண்ணீரை எதிர்பார்க்க முடியாது. தற்போது காய்கறிகள் சொட்டு நீர் பாசனம் மூலம்தான் பயிர் செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அப்படி இருந்தும் போதிய விலை கிடைக்காததால் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை மாடுகளுக்கு தீவமனமாக போட்டு விட்டு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் காய்கறி விளைச்சல் அதிகமாக உள்ளதால், விலை மிகவும் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.