கடும் வறட்சி.... செத்து மடியும் மாடுகள்... கால்நடை வளர்ப்பாளர்கள் கண்ணீர்
கடும் வறட்சியினால் தீவனம், தண்ணீரின்றி தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மாடுகள் உயிரிழந்து வருகின்றன
மேட்டூர்: தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், பயிர்களும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் மாடுகளும் தப்பவில்லை. ஆங்காங்கே அவை செத்து மடிந்து வருகின்றன.
பருவமழை பொய்த்துப் போனதால் குளம் குட்டைகளில் கூட தண்ணீரில்லை. மேட்டூர் அணை சுத்தமாக வறண்டு விட்டது. குடிநீர் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. மனிதர்களுக்கே இப்படி என்றால் கால்நடைகளின் பாடு படு திண்டாட்டமாக உள்ளது.
மேய்ச்சலுக்கு கூட கால்நடைகளுக்கு பசும் புற்கள் இல்லை. பயிர்கள் காய்ந்து போனதால் விவசாயிகள் தற்கொலை ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் கால்நடைகளின் மரணம் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
கால்நடை வளர்ப்பு
மேட்டூரை அடுத்த தமிழக கர்நாடக எல்லையில் வன கிராமங்களில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழில். ஆண்டாண்டு காலமாய் வளர்த்து வந்த இந்த பாரம்பரிய ஆலம்பாடி மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் மலை பகுதிகள் வறண்டு கட்டாந்தரையாய் மாறி போனது . காவிரியும் கை விட்டதால் சொட்டு தண்ணீரும் இல்லை.
பட்டியை திறந்து ஓட்டி விடப்பட்டதும் பல கிலோ மீட்டர் பரந்து விரிந்த வனத்தில் திரிந்து உலவும் மாடுகள் உணவும் தண்ணீரும் இல்லாமல் ஆங்காங்கே மயங்கி விழுகின்றன. இதுவரை 500 மாடுகள் இப்படி இறந்துவிட்டதாக சொல்கின்றனர் கிராம மக்கள்.
மடியும் மாடுகள்
காடுகளில் குற்றுயிராய் மயங்கி கிடக்கும் மாடுகளை மீட்டு வருவதும் இல்லை. சில தினங்களுக்கு அப்படியே சித்தரவதை பட்டு அவை உயிரை விடுவது தான் சோகத்தின் உச்சம். அடி மாடுகளாய் அனுப்ப மனம் இல்லாமலும் செத்து மடியும் வாயில்லா ஜீவன்களை வாழ வைக்க வழியும் தெரியாமலும் விழி பிதுங்கி நிற்கின்றனர் இம்மக்கள். எஞ்சிய ஜீவன்களை காப்பாற்ற எவரேனும் வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் மட்டுமல்ல இந்த மாடுகளும் தான் என்று தனது முகநூல் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார் குணசேகர் என்ற பதிவாளர்.
தீவனமில்லை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் நாள்தோறும் 5 மாடுகள் செத்து மடிந்துள்ளன. மோயர், மசினக்குடி, பலகோலா ஆகிய பகுதிகளில் 300 மாடுகள் உயிரிழந்துள்ளன. அவைகளுக்கு போதிய தீவனம் மற்றும் தண்ணீர் கிடைக்காததால், இறந்ததாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரத்தில் 20 மாடுகள் உயிரிழந்துவிட்டதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் தெரிவித்த போதும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கால்நடை வளர்ப்பாளர்களின் குற்றச்சாட்டாகும்.
உயிரிழப்பு தொடர்கதை
மேலும் இறந்த மாடுகளை அடக்கம் செய்யவும், போதிய வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தருவதில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபோன்ற சூழல் கடந்த 2000ஆம் ஆண்டு ஏற்பட்டதாகவும், ஆனால் சிறிது நாட்களில் மழை பெய்து, எல்லாம் பிழைத்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் தற்போது மாடுகளின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருவது கவலையளிப்பதாக உள்ளது.
ஆள்பவர்கள் சண்டை
ஆளும் அதிமுக அரசு கடந்த ஓராண்டு காலமாகவே உட்கட்சி பிரச்சினையில் சிக்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க இருவரும் போராடி வருகின்றனர். வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் கால்நடைகள் மரணமும் இவர்களின் கண்களுக்கு புலப்படவில்லை.
அரசு நிவாரணம்
இதனிடையே வறட்சியால் உயிரிழந்த கால்நடைகளில் காப்பீடு திட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு மட்டுமில்லாமல் உயிரிழந்த அனைத்து கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். ஆனால் அந்த நிவாரணம் மட்டுமே தங்களுக்கு போதுமானதாக இருக்காது என்பது கால்நடை வளர்ப்பாளர்களின் கருத்தாகும்.