தலையின் உச்சியில் ஏறிய போதை.. போற வர்றவங்களை கடித்த இளைஞர்!
13 வயது சிறுவனை போதை ஆசாமி கடித்து குதறியுள்ளார்.
ஈரோடு: என்னதான் தண்ணி அடிச்சாலும் கண்ணுமண்ணுகூடவா தெரியாம போயிடறது? ஈரோட்டில் ஒருத்தர் போதை என்ற பெயரில் செய்த சேட்டையை படிங்க மக்களே!!
நேதாஜி சாலைக்கும், கச்சேரி சாலைக்கும் நடுவில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த பூக்கடையில் 13 வயது சிறுவன் வேலை பார்த்து பருகிறான். ஆனால் முழு நேரமாக வேலை பார்க்கவில்லை. அங்கிருக்கும் ஒரு பள்ளியில் படித்துகொண்டே சனி, ஞாயிறு லீவுகளில் வந்து இந்த கடையில் வேலை பார்த்துவிட்டு போவான்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறுவன் கடையில் வேலையாக இருந்தான். அப்போது மதியம் 3 மணி இருக்கும். ஒருத்தர் போதையிலேயே தட்டு தடுமாறி பையன் இருந்த இடத்துக்கு வந்தார். தள்ளாடிபடியே ஒருவர் தன்னை நோக்கி வருவதை பார்த்ததும் சிறுவனுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் திடீரென்று அந்த போதை நபர், சிறுவனை கீழே தள்ளிவிட்டார்.
ரத்தம் கொட்டியது
பிறகு சிறுவனின் கை, கால்களை இழுத்துபிடித்து கடிக்க ஆரம்பித்துவிட்டார். சிறுவனோ வலி தாங்க முடியாமல் அலறி துடித்தான். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கம் கடைக்காரர்கள் ஓடிவந்தார்கள். பதறிபோய் அந்தநபரிடமிருந்து முதலில் சிறுவனை மீட்டார்கள். சிறுவனுக்கு உடம்பெங்கிலும் ரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர்.
வெளுக்க ஆரம்பித்தனர்
பின்னர் அந்த போதை நபரை பிடித்து வெளுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் போதை நபரோ அங்கிருந்து தப்ப முயன்றார். சிறுவனுக்கு பொல பொலவென ரத்தம் கொட்டியதை கண்ட மக்கள் இன்னும் ஆத்திரமும், ஆவேசமும் அடைந்து அந்த நபரை பின்னாலேயே துரத்தி கொண்டு போய் சரமாரியாக ரவுண்டு கட்டி அடித்தார்கள்.
திடீர் மயக்கம்
அதுவரை வலிகளை வாங்கி கொண்டு இருந்த போதை நபர், திடீரென மயக்கம் வந்ததுபோல நடுரோட்டில் படுத்து கொண்டார். இப்படி பாவனை செய்ததை பார்த்ததும் மக்களுக்கு இன்னும் பற்றிக்கொண்டுதான் வந்தது. செய்றதையும் செய்துவிட்டு இப்படி மயக்கம் வந்தமாதிரி படுத்து பாவ்லா காட்டுவதை மக்கள் பார்த்து கொண்டே நின்றனர்.
காலை பிடித்து கடித்தார்
உடனே யாருமே எதிர்பார்க்காதபோது, அதுவரை மயக்கத்திலிருந்த போதை நபர், திடீரென ஆக்ரோஷமாக எழுந்தார். சுற்றியிருந்த கூட்டத்தில் ஒருவரிடம் சென்று அவரை சிறுவனை போலவே கீழே பிடித்து தள்ளினார். பிறகு அந்நபரின் கையை, காலை பிடித்து இழுத்து கடிக்க ஆரம்பித்துவிட்டார்.
சிதறிய கூட்டம்
இதனைக் கண்டதும் அங்கிருந்த கூட்டம் முழுவதும் பிச்சிக் கொண்டு தலைதெறிக்க ஓடியது. எப்படி பொதுமக்கள் போதை ஆசாமியை துரத்திபிடித்து அடித்தார்களோ, அதேபோல, போதை ஆசாமி தன்னை அடித்தவர்களை எல்லாம் தேடி பிடித்து துரத்தி கொண்டு ஓடிப்போய் கடிக்க முயன்றார். இப்படியே இந்த ஆசாமியை விட்டால் சரியாக இருக்காது என்று நினைத்த ஓடிக்கொண்டிருந்த மக்கள், திரும்பவும் ஒன்று சேர்ந்தார்கள்.
கைகள், வாயை கட்டினர்
ஆசாமியை விரட்டி, துரத்தி, ஒருவழியாக போராடி பிடித்தார்கள். போதை நபரின் கையையும், வாயையும் கட்டினார்கள். பிறகு ரோட்டோரம் படுக்க வைத்தனர். ஆசாமியால் இப்போது எதுவுமே செய்யமுடியாமல் கை, காலை உதைத்து கொண்டிருந்தார். பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். உடலெங்கும் காயமும், போதையுமாக படுத்து கிடந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போதை வஸ்துக்கள்
பூந்துறை பகுதியை சேர்ந்த அந்த ஆசாமி, சரக்கு மட்டும் அடிக்கவில்லை. கூடவே போதைபொருள் ஏதோ சாப்பிட்டிருக்கிறார் என்று போலீசார் கூறினர். இதில் வேதனையும், கவலையும், அதிர்ச்சியும், அவமானமும் என்னவென்றால் இவ்வளவு சம்பவமும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு பக்கத்திலேயே நடைபெற்றதுதான். எப்படியோ, மதுவை அரசு ஒழிக்க போறது கிடையாது. ஆனால் போதை வஸ்து நடமாட்டத்தை போலீசார் தமிழகம் முழுவதும் குறைக்க நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்குமே!!