பல்லாயிரம் கோடி.. வாட்ஸ் ஆப் போட்டோவை வைத்து இயங்கும் போதை பொருள் கும்பல்.. நூதன கொள்ளை!
இந்தியாவில் இயங்கும் சர்வதேச போதை பொருள் கும்பல்கள் எல்லாம் வாட்ஸ் ஆப் போட்டோவை வைத்து நூதனமாக கடத்தலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: இந்தியாவில் இயங்கும் சர்வதேச போதை பொருள் கும்பல்கள் எல்லாம் வாட்ஸ் ஆப் போட்டோவை வைத்து நூதனமாக கடத்தலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனையாக போதை பொருள் உருவெடுத்து இருக்கிறது. அமெரிக்காவையும், பிலிப்பைன்ஸையும் ஆட்டிப்படைத்த போதை பொருள் வணிகம், தற்போது இந்தியாவையும் நெருங்க தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் போதை பொருளை விற்பனை செய்யும் கும்பல்கள், வாட்ஸ் ஆப் போட்டோவை தங்கள் கடத்தலுக்கு சிக்னலாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
[ இந்தோனேஷியாவை தொடர்ந்து அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்! ]
கைது செய்தனர்
கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு பிரேசிலில் இருந்து வந்த நபர் ஒருவரை கைது செய்தது. அவரிடம் 1 கிலோ கொக்கைன் இருந்தது. அதே வாரம் டெல்லியிலும் அமெரிக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இதேபோல் போதை பொருள் இருந்தது. அவர்கள் இருவரிடம் ஒன்றாக இருந்த இன்னொரு விஷயம் வாட்ஸ் ஆப் டிபி.
என்ன அதிர்ச்சி
அவர்கள் இருவரின் வாட்ஸ் ஆப் டிபியும் அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் முன்பு எடுக்கப்பட்டது. ஹோட்டலின் பெயர் தெரியும் வகையில் போட்டோ எடுத்து வைத்து இருக்கிறார்கள். அதேபோல் அவர்கள் கேலரி முழுக்க சென்னை தொடங்கி பல நகரங்களில் உள்ள முக்கிய ஹோட்டலுக்கு முன் போட்டோ எடுத்து இருக்கிறார்கள். இதை போதை பொருள் விற்பனைக்காக கோடாக பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும்
போலீஸ் விசாரணையில், முதலில் ஒரு நகரத்திற்கு போதை பொருள் எடுத்து சென்றுவிட்டு, அங்கு டீலரிடம் அதை கொடுக்கும் முன் வாட்ஸ் ஆப் டிபியை மாற்ற வேண்டும். இதுதான் இந்தியாவிற்கு அந்த போதை பொருள் ஆசாமி பாதுகாப்பாக வந்துவிட்டான் என்பதற்காக குறியீடு. அந்த டிபி, அவர்கள் ஏற்கனவே பேசி வைத்து இருந்த ஹோட்டலுக்கு முன்பு எடுத்ததாக இருக்க வேண்டும். இதுதான் இதில் முதல் ஸ்டெப்.
அந்த நபர் அனுப்புவார்
இந்த போட்டோவை பார்க்கும் வெளிநாட்டில் உள்ள அந்த போதை கும்பல் தலைவன் அதை சேவ் செய்து, இந்தியாவில் உள்ள டீலர்களிடம் அனுப்பி ஹோட்டல் விவரத்தை தெரிவிப்பான். இந்தியாவில் உள்ள கும்பல் அதே போட்டோவை, அந்த ஏரியாவில் இருக்கும் தன்னுடைய ஆளுக்கு அனுப்புவான். அந்த ''லோக்கல் ஆளின்'' போட்டோ ஏற்கனவே ஹோட்டலில் தங்கி இருக்கும் போதை பொருள் ஆசாமிக்கு இதே முறையில் சென்று இருக்கும். அதன்பின் இருவரும் தங்கள் போட்டோவை காட்டி போதை பொருளை பரிமாறிக் கொள்வார்கள்.
ஏன் இப்படி
இதன் மூலம் மட்டுமே பல கிலோ போதை பொருளை விற்று இருக்கிறார்கள். இதன் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய் இருக்குமாம். இதற்கு பல காரணம் சொல்கிறார்கள். போலீஸ் தங்கள் மொபைலில் பேசுவதை கவனிக்கிறது. மெசேஜ்களை கண்காணிக்கிறது என்று போதை பொருள் ஆசாமிகள் அச்சத்தில் உள்ளனர். இதனால் வார்த்தைகளை வைத்து பேசாமல் வாட்ஸ் ஆப் போட்டோக்களை மட்டுமே வைத்து பேசிக்கொள்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.