போதை பொருள் புழக்கமா? - பாளை மத்திய சிறையில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு
பாளையம்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் போதை பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
நெல்லை: பாளை மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தியது சிறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் உள்ள பாளை மத்திய சிறையில் கஞ்சா, பீடி மற்றும் போதை வஸ்துகள் புழக்கம் அதிகமாக இருப்பதாக மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தது.
அதன் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசிங் தலைமையில் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், குணசீலன், மற்றும் போலீசார் பாளை மத்திய சிறையில் மாலை திடீர் என அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
முதலாவது பிளாக் தொடங்கி நான்காவது பிளாக் வரை சிறையின் ஒவ்வொரு பகுதியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் சிறை கழிவறைகள், கேன்டீன், மருத்துவமனை ஆகியவற்றிலும் சோதனை நடந்தது.
இதில் சிம் கார்டு, செல்போன் உள்ளிட்ட எதுவும் சிக்கவில்லை. மேலும் பீடி, கஞ்சா, போதை வஸ்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அதற்கான தடயங்கள் கிடைக்காததால் அதிகாரிகள் ஆய்வை முடிந்து விட்டு திருப்பினர். முன்னதாக சிறை அதிகாரிகளிடம் அவர்கள் ஆலோசனை நடத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.