10 ரூபாக்கு என்ன கிடைக்கும்... 30 முருங்கைக்காய்களின் சக்தி.... நெல்லை மக்கள் குஷி!
நெல்லை பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை பகுதியில் முருங்கைகாய் அமோகமாக விளைந்துள்ளதால் அதை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி காரணமாக அனைத்து காய்கறிகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கத்தரிக்காய் உள்ளிட்ட உள் மாவட்டத்தில் விளையும் காய்கறிகளுக்கு ஓரளவுக்கு விலை உள்ளது.
இந்த நிலையில் வறட்சியிலும் தாக்கு பிடிக்கும் முருங்கைக்காய் விலை மட்டும் அதிரடியாக குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் தாழையூத்து, சங்கர்நகர், துரையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், பேய்குளம் சுற்று வட்டாரத்திலும் முருங்கை விளைச்சல் அதிகமாக இருக்கிறது.
தற்போது சீசனை ஓட்டி மரங்களில் பூக்கள் அதிகமாக காணப்படுவதோடு காய்கள் கொத்து, கொத்தாக காய்த்துள்ளன. இதனால் கிராமப்புறத்தில் முருங்கைகாய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மானூர் சுற்று வட்டார கிராமங்களில் ரூ.1 மூன்று முருங்கைக்காய்கள் விற்பனை செய்யப்படுகிறது. நகர்புறங்களில் இது ரூ.1-க்கு 2 காய்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பொங்கல் தினத்தில் ஒரு முருங்கைகாய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டது. தற்போது அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.