புது ஆட்டோ.. ஓவர் சவுண்டில் பாட்டு.. கட்டிப்புரண்டு சண்டை.. காது போச்!
Recommended Video
திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதிதாக வாங்கிய ஆட்டோவில் அதன் டிரைவர் அதிக அளவில் பாட்டை ஒலிக்க விட்டு ஜாலியாக கேட்டுக் கொண்டிருந்தார். இதைத் தட்டிக் கேட்டார் ஒரு குடிகாரர், இருவருக்கும் சண்டை மூண்டதில் டிரைவரின் காதைக் கடித்துத் துப்பி விட்டார் குடிகாரர்.
குடிகாரர்கள் எதையும் செய்வார்கள். அவர்களிடம் வம்பு வைத்துக் கொள்ள அத்தனை பேரும் தயங்குவதற்கு இதுதான் முக்கியக் காரணம். இப்படித்தான் இந்த ஆட்டோ டிரைவர் தேவையில்லாமல் ஒரு குடிகாரரிடம் சிக்கி தனது காதை இழந்துள்ளார்.
வாங்க அந்தக் காதை.. ஸாரி.. கதையைப் பார்ப்போம்..!
திருப்பத்தூர் செல்லரப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (23), ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான முல்லைவேந்தன். இவர் டிப்பர் லாரி டிரைவர்.
ரவிச்சந்திரன் புதிதாக ஆட்டோ வாங்கியுள்ளார். புது சரக்கு என்றாலே ஒரு ஷோக்கு இருக்கும் இல்லையா. எனவே அடிக்கடி ஆட்டோவில் பாட்டை சவுண்டாக ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த முல்லைவேந்தன் (சம்பவத்தின்போது குடிபோதையில் இருந்துள்ளார் முல்லை) ஏன் இப்படி சவுண்டா பாட்டு கேட்கிறே என்று தட்டிக் கேட்டுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் தகராறு மூண்டது. வார்த்தை தடித்தது. கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். அப்போது முல்லைவேந்தன் ஓவர் கடுப்பாகி, ரவிச்சந்திரன் காதைப் பிடித்து இழுத்து கடித்து விட்டார். ஆத்திரத்தில் கடித்ததில் காது துண்டாகி விட்டது. துண்டிக்கப்பட்ட இடது காதுடன், வலியால் அலறிய ரவிச்சந்திரனை 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ஏற்றி அனுப்பினர்.
ஆனால் காதை தாறுமாறாக முல்லைவேந்தன் கடித்து விட்டதால் அதை இணைக்க முடியாது என்று டாக்டர்கள் கூறி விட்டதாக கூறப்படுகிறது. கந்திலி போலீஸார் முல்லைவேந்தனைக் கைது செய்துள்ளனர்.