விளையாட்டு வினையானது: பெற்றோரை மிரட்ட உடலில் தீ வைத்த 'குடி'மகன் பலி
நாமக்கல்: நாமக்கலில் பெற்றோரை மிரட்ட தனது உடலில் தீ வைத்த நபர் பரிதாபமாக பலியானார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருக்கும் வாசலூர்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமியின் மகன் ஜெய்சங்கர்(34). விவசாய கூலித் தொழில் செய்து வந்தார். தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டவர். ஏன் இப்படி குடித்து குடித்து சீரழிகிறாய் என்று பெற்றோர் கேட்டால் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி வந்துள்ளார். பல சமயம் மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி பெற்றோரை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமையும் வழக்கம் போன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோர் அவரை கேள்வி கேட்க வழக்கம் போல மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்கப் போகிறேன் என மிரட்டியுள்ளார்.
பெற்றோரை மிரட்ட அவர் தனது உடலில் தீ வைத்தார். தீப்பிடித்தவுடன் அவர் வலியால் அலறினார். தீ மளமளவென பிடித்து எரிய அவரது பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் தீயை அணைத்து அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.