இன்று லீவு.. நேற்றே டாஸ்மாக் கடைகளில் கட்டி ஏறி பாட்டில் வாங்கிய குடிகாரர்கள்!
சென்னை: மே தினத்தையொட்டி இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், நேற்றே மதுக் கடைகளில் குடிகாரர்கள் கூட்டம் கட்டி ஏறியது. பலரும் பாட்டில் பாட்டிலாக வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.
பல இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால் நீண்ட வரிசையில் குடிகாரர்களை நிறுத்தி வாங்கச் செய்ததையும் காண முடிந்தது.
தொழிலாளர் தினம் என்பதால் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் புதன்கிழமை சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவகைகளை வாங்க குடிகாரர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை ஒன்றில் நூற்றுக்கணக்கான குடிகாரர்கள் வரிசையில் காத்திருந்ததால் அந்த வழியே செல்லும் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
பலரும் ஏகப்பட்ட மது வகைகளை பாட்டில் பாட்டிலாக வாங்கிச் சென்றனர். இன்று ஒரு நாள் குடிக்காமல் விட்டு விடக் கூடாது என்ற வேகம் அவர்களது கண்ணில் தெரிந்தது.
அதேசமயம், கூட்டத்தைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைக்காரர்கள், காலாவதியான மது பாட்டில்களை தள்ளி விட்டதாகவும் குடிக்க வந்து பாட்டில் வாங்கியவர்கள் புலம்பியதையும் காண முடிந்தது.
குடித்தால் சீக்கிரமாக உயிரே காலாவதியாகி விடும். இந்த நிலையில் காலாவதியான சரக்கு குறித்து இவர்கள் விசனப்படுவதைப் பாருங்கள்...