எப்படி அறைஞ்ச.. சப்புன்னு அறைஞ்சேன்.. சப் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அடித்தவர் கம்பி எண்ணுகிறார்!
போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டரை டிரைவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
சென்னை: சென்னை திருவான்மியூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை ஆட்டோ டிரைவர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் மஜீத் என்பவர், திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அடையாறிலிருந்து ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. சாலையில் கோணல் மாணலாக வந்த ஆட்டோவை கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் மறித்து நிறுத்தினார்.
பின்னர் ஆட்டோ ஓட்டி வந்த டிரைவரிடம் தாறுமாறாக ஓட்டி வந்தது குறித்து விசாரித்தார். அப்போது ஆட்டோ டிரைவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சப்-இன்ஸ்பெக்டருக்கும் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது தகராறாக மாறியதையடுத்து, ஆத்திரமடைந்த டிரைவர் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆட்டோ டிரைவரை திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் டிரைவரின் பெயர் பார்த்தசாரதி என்பதும், அதே பகுதியிலுள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இறுதியில் சப்-இன்ஸ்பெக்டர் டிரைவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.