சென்னையில் மீண்டும் பயங்கரம்... நீலாங்கரையில் சொகுசு கார் மோதி மூதாட்டி பலி
சென்னை: சென்னை நீலாங்கரை பகுதியில் வேகமாகச் சென்ற சொகுசு கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாடுகளற்று கார் ஓட்டுவதும் அதில் யாராவது அப்பாவி பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் ஒன்று சாலையில் சென்றுக் கொண்டிருந்த மூதாட்டி மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். மேலும், கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் விடுமுறை நாட்களில் கார் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நேரங்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் போது இதுபோன்ற கோர விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த விபத்தை ஏற்படுத்தியவரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.