விஷ்ணு பிரியா தற்கொலை வீடியோ எங்கே? பரபரப்பை ஏற்படுத்தும் 2 பக்க கடிதம்
நாமக்கல்: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டு 15 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் பெரும்பாடு பட்டு வரும் நிலையில், தனது தற்கொலை வீடியோ டேப்லெட்டில் உள்ளதாக விஷ்ணுபிரியா எழுதியுள்ள மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனது தற்கொலை தொடர்பாக உங்களுடைய அனைத்துவித சந்தேகங்களும் வீடியோ கேசட்டில் தெளிவாக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஷ்ணு பிரியா தற்கொலை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா, கடந்த மாதம் 18 ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில் உயரதிகாரிகளின் அழுத்தமே தற்கொலைக்குக் காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்கொலை கடிதம்
விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட தினத்தன்று அவருடைய அறையில் இருந்து 9 பக்க கடிதம் ஒன்றை கைப்பற்றியதாக போலீசார் ஏற்கனவே ஒன்றை வெளியிட்டனர். அப்போதே அரசியல் கட்சியினரும், விஷ்ணுபிரியாவின் உறவினர்களும் அந்த கடிதத்தில் மேலும் சில பக்கங்கள் இருப்பதாகவும், அதை போலீசார் வெளியிடவில்லை என்றும் குற்றச்சாட்டை கூறி வந்தனர்.
2 பக்க கடிதம்
ஏற்கனவே 9 பக்க கடிதம் வெளியான நிலையில் விஷ்ணுபிரியா எழுதிய 2 பக்க கடிதம் ஒன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில், ''என்னுடைய தற்கொலை வீடியோ எனது டேப்லெட்டில் இருக்கும். அதை பாருங்கள். நான் இறந்த பிறகு என் கையடக்க கணினியை மகேஸ் அக்காவிடம் கொடுத்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு பிரியா.
பிரேத பரிசோதனை
கீதாஞ்சலிருக்கு ரூ.24 ஆயிரம் கொடுங்கள். திவ்யாவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிவிடுங்கள். பத்திரிக்கையாளர்கள், போலீசாருக்கு எனது வேண்டுகோள், என்னை அமைதியாக சாகவிடுங்கள். எனது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறியுள்ள விஷ்ணு பிரியா, நான் கத்தியால் அறுக்கப்படுவதை வெறுக்கிறேன். நான் என் வாழ்க்கையில் பல பிரேத பரிசோதனைகளை பார்த்து உள்ளேன். அதனால்தான் எனக்கு அது நடக்கக்கூடாது என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
வீடியோ கேசட்
எனது தற்கொலை தொடர்பாக உங்களுடைய அனைத்துவித சந்தேகங்களும் வீடியோ கேசட்டில் தெளிவாக்கப்படும். மேலும் அந்த கடிதத்தில் அம்மாவுக்கு என்று குறிப்பிட்டு ஏ.டி.எம். கார்டு ரகசிய எண், சிறிய மடிக்கணினி ரகசிய எண், செல்போன் எண் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அம்மாவுக்கு ஏடிஎம் கார்டு
மேலும் அந்த கடிதத்தில் அம்மாவுக்கு என்று குறிப்பிட்டு ஏ.டி.எம். கார்டு ரகசிய எண், சிறிய மடிக்கணினி ரகசிய எண், செல்போன் எண் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டு இருந்தது. கடைசியாக இட் இஸ் டைம் டூ லீவ்... குட் பை டு ஆல் ஆப் யூ... ஐ கொயட் என முடிந்துள்ளது விஷ்ணுபிரியாவின் தற்கொலைக் கடிதம். அந்த கடிதத்தில் விஷ்ணு பிரியா என்று கையெழுத்து போடப்பட்டு 15-7-15 என்று தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அந்த கடிதத்தை விஷ்ணுபிரியா முன்பே எழுதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கோகுல்ராஜ் கொலை
கோகுல்ராஜ் கொலை வழக்குபற்றி இந்த கடிதத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. ஜூன் 23ம் தேதி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 27ம் விஷ்ணு பிரியா விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். ஜூலை 14ம் தேதிவரை இதில் 15 பேரை அவர் கைது செய்திருக்கிறார். இந்த நிலையில்தான் ஜூலை 15ம் தேதி 2 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் விஷ்ணு பிரியா. அப்போது மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கடிதம் வாட்ஸ் அப்
விஷ்ணு பிரியா தற்கொலை குறித்து கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ், தினம் ஒரு தகவலை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு வருகிறார். கடிதமும் எழுதி வரும் நிலையில் விஷ்ணு பிரியா எழுதிய 2 பக்க கடிதமும் வெளியாகி பரபரப்பு தீயை பற்றவைத்துள்ளது.
சிபிசிஐடி விசாரணை
விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பாக முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விஷ்ணுபிரியாவிடம் அதிகமுறை செல்போனில் தொடர்பு கொண்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
டிஎஸ்பி மகேஷ்வரியிடம் விசாரணை
வழக்கறிஞர் மாளவியா, அர்ச்சகர் விஜயராகவன் ஆகியோரைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் விஷ்ணுபிரியாவின் தோழியும், கீழக்கரை டிஎஸ்பியுமான மகேஸ்வரியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
தடய அறிவியல் சோதனை
விஷ்ணுபிரியாவின் அறையில் இருந்து ஏற்கனவே மீட்கப்பட்ட கடிதம், மடிக்கணினி, செல்போன்கள் ஆகியவற்றை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி நீதிமன்ற அனுமதியுடன் சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். அதன் முடிவுகள் வந்த பிறகே கைப்பற்றப்பட்ட கடிதத்தில் உள்ள கையெழுத்து விஷ்ணுபிரியா எழுதியது தானா? அவரது மடிக்கணினியில் இருந்து விவரங்கள் எதுவும் அழிக்கப்பட்டு உள்ளதா? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர்.