எத்தனை பேருக்கு கமிஷன் கொடுத்தேன் தெரியுமா... போட்டுக் கொடுத்த செம்மரக் கடத்தல் டிஎஸ்பி தங்கவேலு!
வேலூர்: செம்மரக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள டிஎஸ்பி தங்கவேலு தான் யாருக்கெல்லாம் கமிஷன் கொடுத்தேன் என்பதை போலீஸாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். அவர் கூறிய நபர்களில் அதிமுகவினரும் உள்ளனர் என்பதால் அதிமுக தரப்பும் பீதியடைந்துள்ளது.
மொத்தமாக 37 பேரின் பெயர்களையும் அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த 37 பேரையும் பாரபட்சம் இல்லாமல் அரசு துரத்திப் பிடித்துக் கைது செய்யுமா என்பதுதான் தற்பேது பெரும் கேள்விக்குறியாக எழந்துள்ளது.
மிகப் பெரிய அளவில் இந்த செம்மரக் கடத்தல் விவகாரத்தில் வாழ்ந்துள்ளார் தங்கவேலு. பணம் கொட்டியுள்ளது. கோடிக்கணக்கில் கமிஷன் வாங்கியுள்ளார். கிட்டத்தட்ட இதுதான் மெயின் தொழில் போல அவருக்கு இருந்துள்ளது. போலீஸ் வேலையை வைத்து தனது தவறான செயல்களுக்கு பாதுகாப்பும் தேடியுள்ளார். காவல்துறைக்கும் மிகப் பெரிய களங்கமாக இருந்துள்ளார்.
வேலுார் மாவட்டம், மாதனுாரை அடுத்த பாலுாரைச் சேர்ந்த, பா.ம.க., பிரமுகர் சின்னப்பையன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கப் போன போதுதான் போலீஸாருக்கு தங்கவேலுவின் வண்டவாளம் தெரிய வந்தது. கலால் பிரிவு டிஎஸ்பியான தங்கவேலுதான் இந்த வழக்கி்ல் முக்கியக் குற்றவாளி என்று தெரிய வந்தது. இதையடுத்து தங்கவேலு எஸ்கேப் ஆகி விட்டார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திராவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற அவரை காட்பாடியில் வைத்து போலீஸார் வளைத்துப் பிடித்தனர். அவரிடம் மிகப் பெரிய போலீஸ் பட்டாளமே விசாரணை நடத்தியுள்ளது. வேலூர் சரக டிஐஜி செந்தமிழ்ச் செல்வன், எஸ்பி செந்தில்குமாரி உள்பட 14 உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
அதன் பின்னர் அவரை ஆம்பூர் நீதிபதி ஆனந்தராஜன் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீஸ் விசாரணையின்போது பல பரபரப்பான தகவல்களை தங்கவேலு வெளியிட்டுள்ளாராம்.
திருப்பதி அருகே இருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கொல்கத்தாவுக்கு கடத்திச் செல்லும் வேலை சமீபத்தில் தங்கவேலுவுக்கு வந்தது.
இந்தக் கட்டைகள் அனைத்தும் வேலூர், திருவள்ளூர், சென்னையில் பதுக்க வைக்கப்பட்டுள்ளதாக தங்கவேலு தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய பண மதிப்புள்ள இந்தக் கட்டைகளை பத்திரமாக கொல்கத்தாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க பல கோடி ரூபாய் கமிஷனாக பெற்றுள்ளார் தங்கவேலு.
இதையடுத்து களத்தில் இறங்கினார் தங்கவேலு. தனது திட்டத்திற்கு கள்ளச்சாராயம் விற்பவர்களான வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமி, நாகேந்திரன் ஆகியோரைப் பயன்படுத்தினார்.
முதல் கட்டமாக சின்னைப் பையனுக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் பதுக்க வைத்திருந்த 7 டன் கட்டைகளை சோதனை என்ற பெயரில் போலீஸ் பாதுகாப்புடன் கடத்தியுள்ளனர். அதை நாகேந்திரன் வீட்டில் கொண்டு போய் பதுக்கினர்.
இதேபோல பிற இடங்களில் உள்ள கட்டைகளையும் அங்கிருந்து கடத்தி வேறு இடத்திற்கு மாற்றத் திட்டம் போட்டிருந்தார் தங்கவேலு. ஆனால் அதற்குல் சின்னப் பையன் கொலை செய்யப்பட்டு விடவே எல்லாம் முடங்கியுள்ளன.
நீண்ட காலமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த தங்கவேலு தனது செயல்களுக்குப் பெரும்பாலும் கள்ளச்சாராய வியாபாரிகளைததான் பயன்படுத்தி வந்துள்ளார்.
மேலும் வனத்துறையினர், போலீஸ் அதிகாரிகள், கட்சிக்காரர்கள் என பலருடனும் இவருக்கு நெருக்கமான தொடர்பு உள்ளதாகவும் போலீஸார் கூறுகிறார்கள்.
குறிப்பாக தனது விசாரணையின்போது 4 அதிமுக பிரமுகர்கள் குறித்த தகவல்களையும் தங்கவேலு கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிமுக தரப்பு ஆடிப் போயுள்ளதாம்.
இந்த நிலையில் தங்கவேலு மேலும் பேசாமல் இருக்க அவரைக் கொலை செய்ய சிலர் திட்டமிடலாம் என்பதால் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் போலீஸார் திட்டமிட்டு வருகின்றனராம்.