மகளுக்கு நீதி கிடைக்கும்வரை விடப்போவதில்லை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தந்தை திட்டவட்டம்
விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கில் அவரது தந்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Recommended Video
கோவை: திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அறிவித்துள்ள நிலையில், தன் மகள் மரணத்தில் நீதி கிடைக்கும் வரை விடப்போவதில்லை என அவரது தந்தை ரவி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 2015 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாமக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை சி பி சி ஐ டி விசாரித்து வந்த நிலையில் அதனை சிபிஐ க்கு மாற்றம் செய்ய கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில் வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணையை முடித்து கொண்ட சிபிஐ கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில் விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே என்றும் கொலைக்கான முகாந்திரம் இல்லாததால் விசாரணையை முடித்து கொள்வதாகவும் கூறியிருந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சிபிஐ அறிக்கையின் முகாந்திரத்தை சுட்டிக்காட்டி விஷ்ணு பிரியாவின் தந்தை ரவிக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதில் சிபிஐ அறிக்கையில் ஏதேனும் கருத்துக்கள் கூற விரும்பினால் 9 ம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி விஷ்ணு பிரியாவின் தந்தை இன்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வந்தார். சம்மன் அனுப்பியதால் இன்று தான் ஆஜராக வந்ததாகவும், வழக்கை முடித்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். பின்னர் நீதிபதி மலர்கண்ணன் வரும் 24 தேதிக்கு இவ்வழக்கை ஒத்தி வைத்தார. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணுபிரியா தந்தை ரவி, தன் மகள் மரணத்தில் நீதி கிடைக்கும் வரை விடப்போவதில்லை என்றார்.