டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?- தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் வாதம் முடிவடைந்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பி-யாக இருந்த விஷ்ணுபிரியா, கடந்த ஆகஸ்ட் 18ம் தேதியன்று அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால்தான் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது தோழியும், கீழக்கரையில் டிஎஸ்பியாக பணிபுரியும் மகேஸ்வரியும் கூறினார். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய விஷ்ணு பிரியாவின் பெற்றோர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சிபிசிஐடி விசாரணை
இந்த நிலையில் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க அரசு உத்தரவிட்டது. அதேபோல தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காதல் பிரச்சினையா?
விஷ்ணுபிரியாவிடம் அடிக்கடி செல்போனில் பேசியவர்கள், விஷ்ணுபிரியாவின் தோழிகள் மற்றும் போலீசார் சிலரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. காதல் பிரச்சினையில் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்று கதைகட்டப்பட்டது. அதற்கேற்றார் போல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் மாளவியா, திருக்கோஷ்டியூர் கோவில் அர்ச்சகர் விஜயராகவன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிபிஐ விசாரணை கோரிக்கை
வழக்கின் விசாரணை திசைமாறுவதை அறிந்த பெற்றோர், விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் இதேபோல சிபிஐ விசாரணை கோரி கோரிக்கை விடுத்தனர்.
தந்தை மனு தாக்கல்
இந்நிலையில், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், ‘எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. காவல்துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் இறந்திருக்கிறார். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
உயர்நீதிமன்றத்தில் விசாரணை
உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பையா முன்பு புதன்கிழமை நடந்த விசாரணையின் போது, சி.பி.சி.ஐ.டி விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்றும், பல உயரதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கூறப்படும் சூழலில், சி.பி.சி.ஐ.டியால் சரியாக விசாரணை நடத்த இயலாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அப்போது, சிபிசிஐடியும், சிபிஐ போன்று தனியான அமைப்புதான் என்றும், காவல்துறை அதிகாரிகளிடம் அந்த அமைப்புக்கு தொடர்பில்லை எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிபதி சுப்பையா ஒத்திவைத்துள்ளார். நீதிபதி அளிக்கும் தீர்ப்பினை பொறுத்தே விஷ்ணுப்பிரியா மரண வழக்கை சிபிஐ விசாரிக்குமா என்பது தெரியவரும்.