3 நாட்களில் 7,000 ஆபரேஷன்கள் நிறுத்தம்: தொடரும் மருத்துவ மாணவர்கள் போராட்டம்.. நோயாளிகள் பாதிப்பு!
மருத்துவ மாணவர்களின் போராட்டம் 17வது நாளாக நீடிப்பதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: மருத்துவ மாணவர்களின் போராட்டம் 17வது நாளாக நீடிப்பதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 7000 ஆபரேஷன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் 17-வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் திடீரென நிறுத்தப்பட்டன.
நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வராததால் நேற்றும் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளான மூலம், ஹெர்னியா ஆபரேஷன், கண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை 2வது நாளாக மேற்கொள்ளாமல் மருத்துவர்கள் நிறுத்தினர்.
நிறுத்தப்பட்ட ஆபரேஷன்கள்
இதனால் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனையில் நேற்று தேதி குறிப்பிட்டு நிர்ணயிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட ஆபரேஷன்கள் நிறுத்தப்பட்டன. இதேபோன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நேற்று நடைபெற இருந்த திட்டமிடப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆபரேஷன்கள் நிறுத்தப்பட்டது.
7000 ஆபரேஷன் நிறுத்தம்
அதன்படி, தமிழகம் முழுவதும் 2 நாளில் சுமார் 5 ஆயிரம் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆபரேஷன் மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மூன்றாவது நாளாக நீடிக்கும் போராட்டத்தால் 7000 ஆபரேஷன்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நோயாளிகள் கடும் அவதி
இதேபோன்று, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 150 ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட தமிழகம் முழுவதும் 1800க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பணிக்கு செல்லாமல் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் உட்பட பல்வேறு சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிகிச்சையளிக்கும் செவிலியர்கள்
அவர்களுக்கு பணியில் இருந்த செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் ஜெயா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற முன்னாள் ராணுவ வீரர் நேற்று காலை 11 மணிக்கு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழந்த நோயாளி
அங்கே அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து உள்நோயாளியாக அனுமதித்தனர். அதன்பிறகு இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக மருத்துவர்கள் அவரை சென்று பார்க்கவோ அல்லது தொடர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவோ இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை மோசமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.