மணம் நல்லா இருந்தாலும் பணம் இல்லையே.. விண்ணை தொட்ட மல்லிகை பூ விலை
நெல்லையில் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் பொது மக்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நெல்லை: பொங்கல் பண்டிகையை ஒட்டி நெல்லையில் மல்லிகை பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் பொது மக்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நெல்லை பூ மார்க்கெட்டில் மாலை மல்லிகை பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்னும் பல கடைகளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேலும் மல்லிகை பூ விற்கப்படுகிறது. இது போல் கனகபரத்தின் விலையும் கிலோவுக்கு ரூ.2500 வரை விற்கப்படுகிறது.
இதுகுறித்து மார்கெட்டை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், நெல்லை பூ மார்க்கெட்டிக்கு சங்கரன்கோவில் மொத்த பூ மார்க்கெட்டில் இருந்தே பெரும்பாலான பூக்கள் வருகிறது. மல்லிகையை பொறுத்தவரை சமீபகாலமாக விளைச்சல் இல்லை. அதனால் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் பல கடைகளிலும் தற்போது மல்லிகை பூ கிடைப்பது இல்லை, என்றார்.
மானூர், பனவடலிசத்திரம், ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தற்போது பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கனகபரத்தின் விலையும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோன்று பிச்சி் பூ ரூ.1500, செவ்வந்தி பூ ரூ.150, அரளி ரூ.250, கேந்தி ரூ.40, சம்பங்கி ரூ.250, பெங்களுரூ ரோஸ் ரூ.250 என விற்கப்பட்டு வருகிறது.
இந்த விலை இன்று மாலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்கள் இப்போதே பூக்களை வாங்கி வைக்க ஆரம்பித்துள்ளனர்.