வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் முழுஅடைப்பு: எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்
Recommended Video
கன்னியாகுமரி : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் தமிழக எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடமாநிலங்களில் இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கேரளாவில் தலித் அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கையாக தமிழக எல்லைகளிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாகர்கோவில் களியக்காவிளை, திங்கள்சந்தை உள்ளிட்ட இடங்களில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாள்தோறும் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று நடைபெறும் முழு அடைப்பிற்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாத பட்சத்திலும் பேருந்துகள் பாதுகாப்பு கருதி களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் பேருந்து சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்பதால் களியக்காவிளை சென்று அங்கிருந்து கேரள மாநில பேருந்துகளில் மக்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று தென்காசியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செங்கோட்டை வழியாகவே கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து பூ, பால் உள்ளிட்டவை எடுத்து செல்லப்படுகின்றன. பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பூக்கள், பால் தேக்கம் அடைந்துள்ளது.