சென்னைப்புறநகர் பகுதிகளில் தொடர்மழை: பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடிக்கடி பெய்து வரும் கனமழையால், சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஓரளவுக்கு தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூண்டியில் சேமிக்கப்படும் நீர், இணைப்புக்கால்வாய்கள் வழியாக, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சென்னையின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாகவும், ஆந்திராவிலிருந்து வரவேண்டிய 12 டிஎம்சி தண்ணீர் வராதது போன்ற காரணங்களால் பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு போனது. பல மாதங்களாக நீடித்த இந்த நிலையால் சென்னை மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் தொடர் சாலைமறியலில் ஈடுபடும் அளவுக்கு சென்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது பெய்த கனத்த மாலை காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதே போல இன்னும் 10 நாட்களுக்கு கனத்த மழை பெய்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்கிறார்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.
நேற்றைய நிலவரப்படி, பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், தற்போது 27 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 150 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தால் மட்டுமே குடிநீருக்காக தண்ணீர் திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.