திருப்பூரில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிய இளம் பெண் பலி
கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்தார்.
திருப்பூர்: திருப்பூரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் நேற்று நாள்முழுவதும் வெயில் வாட்டிய நிலையில் நள்ளிரவு பயங்கர இடி-மின்னலுடன் சூறைகாற்று வீசியது. நீண்ட நேரம் கொட்டிய கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
இந்நிலையில், திருப்பூர்-அவினாசி ரோடு தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் துரைசாமி என்பவர் பனியன் கம்பெனி ஒன்றை கட்டி வருகிறார். 3 மாடி கட்டப்பட்டு முடிவடைந்தநிலையில் 4-வது மாடி கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடம் அருகிலேயே திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிபுரியும் திருப்பதி என்பவர் தனது மனைவி ஐஸ்வர்யா 26 மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் ஐஸ்வர்யாவின் உறவினர் குழந்தைகள் 2 பேரும் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் திருப்பதி மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வீட்டில் நேற்றிரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது கனமழையால் கம்பெனியின் 4-வது மாடி சுவர் இடிந்து திருப்பதியின் ஓட்டு வீடு மீது விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்து மூடியது. இதில் சம்பவ இடத்திலேயே ஐஸ்வர்யா உடல்நசுங்கி பலியானார். திருப்பதி மற்றும் 2 குழந்தைகள் உயிர் தப்பினர். ஆனால் உறவினர்கள் குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்ததும் அக்கம்பக்கம் இருந்த வீட்டினர் ஓடிவந்து ஐஸ்வர்யா உடலை மீட்டதுடன், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களையும் காப்பாற்றினர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து ஐஸ்வர்யா உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.