நாட்டின் 71வது சுதந்திர தினம்...தமிழகத்தில் பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீசார்!
நாட்டின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை : சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் 71வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் சிறப்பான முறையில் நடக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. தீவிரவாத தாக்குதல்கள், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். விமான நிலையங்களுக்கு இன்று இரவு முதல் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
விமான நிலையத்திற்குள் ஆகஸ்ட் 20ம் தேதி வரைh பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.