தீவிரமடையும் கதிராமங்கலம் போராட்டம்... முதல்வர் வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு
முதல்வர் பழனிச்சாமி வீட்டை கதிராமங்கலம் மக்கள் முற்றுகையிட்டு போராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தஞ்சை கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாயில் ஏற்பட்ட கசிவை அடுத்து கொந்தளித்த மக்கள், போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் உள்ள முதல்வர் பழனிச்சாமி வீட்டின் முன்பு கதிராமங்கலம் மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து முதல்வர் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் 7 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 30ம் தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.
அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த கிராமத்தினர் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், 9 பேரை கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் சனிக்கிழமையன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3வது நாளாக போராட்டம்
மேலும் உடைப்பு ஏற்பட்ட ஆழ்துளை கிணற்றை முற்றுகையிட வந்த 75 பேரை போலீசார் கைது செய்தனர். 3வது நாளாக இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
போராட்டக்காரர்கள் மனு
இந்த நிலையில், கதிராமங்கலத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் 3 குழுவாகப் பிரிந்து ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், முதல்வர் வீட்டிற்குச் சென்று மனு அளிக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதனால் சென்னையில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
போலீசார் குவிப்பு
இதைத் தொடந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீடு, தலைமைச் செயலகம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டனர். இதேபோல், தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மெரினாவில் கண்காணிப்பு
இதனிடையே, மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் போல், போராட்டக்காரர்கள் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கூடி விடாதபடி போலீசார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.