கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா : ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்க நான்கு நாட்கள் தடை
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நான்கு நாள் மீன்பிடிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளதால், ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு நான்கு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கச்சத்தீவு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு அன்னியர் ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 21ம் தேதியில் இருந்து முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் நாட்டுப்படகுகள், விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.