ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய 35 சுற்றுலா பயணிகள் மீட்பு
விருதுநகர்: குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விருதுநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதையடுத்து ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வட கிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மலைப்பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீரின் வேகமும் அதிகமாக உள்ளது. அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிலரை தண்ணீர் இழுத்துச் சென்றது. அதனைக் கண்ட கரையில் இருந்த சிலர் உடனடியாக ஆற்றில் குதித்து அவர்களை மீட்டனர்.
இதற்கிடையே ஆற்றின் மறுகரையில் சுற்றுலா சென்ற சுமார் 35 பேர் சிக்கிக் கொண்டனர். நேரம் செல்ல, செல்ல ஆற்றில் வெள்ள நீர் அதிகரித்ததால், அவர்கள் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மறுகரையில் இருந்த 35 பேரையும், கயிறுகட்டி வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அய்யனார் கோவில் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.