எந்த கட்சியிலும் ரஜினி சேரமாட்டார்-தனிக்கட்சிதான் தொடங்குவார்: திருநாவுக்கரசர் எக்ஸ்குளூசிவ் பேட்டி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை: ப.சிதம்பரத்தின் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஒன் இந்தியாவுக்கு சிறப்புப்பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை நிற்கும். அனைந்திந்திய காங்கிரஸ் கட்சியும் துணை நிற்கும்.
இன்று ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் நாளை முன்னாள் அமைச்சர்கள் ஆவார்கள். அப்போது அவர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டால் எப்படி இருக்கும்? நிதி அமைச்சராக இருந்தவர் வீட்டில் சோதனை செய்வது மதிப்பு மிகு நடவடிக்கையா? நாளை அருண் ஜேட்லி வீட்டில் சோதனை நடத்தப்பட்டால் அவமானம் இல்லையா?
இந்தியாவில்தான்...
பெரும்பான்மையான நாடுகளில் இப்படியெல்லாம் நடப்பது இல்லை. இந்தியாவில் தான் இப்படி தரமில்லாமல் நடக்கிறது. ஒருவர் வகித்த பதவிக்கு மதிப்பு தர வேண்டாமா? பத்து லட்சம் லஞ்சம் வாங்கி ஐந்து செகரட்டரிகள் ஆளுக்கு இரண்டு லட்சம் என பிரித்துக்கொள்வார்களா? அந்த அளவுக்கா ஐஏஎஸ் அதிகாரிகள் தரம் தாழ்ந்து உள்ளனர்?
பழி வாங்குகிறது
மோடி அரசு, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல முன்னேற்றமான திட்டங்களை செய்ய வேண்டும். இதைவிட்டுவிட்டு யாரை எப்படி பழிவாங்குவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் என் நல்ல நண்பர். அவர் அரசியலுக்கு வருவாரா, தனிக்கட்சி ஆரம்பிப்பாரா அல்லது வேறு கட்சியுடன் இணைவாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். அவருடைய ரசிகர் சந்திப்புக் கூட்டத்தில் பேசியதிலிருந்து அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அவர் எந்த மாநிலக் கட்சியிலும் அல்லது தேசியக் கட்சியிலும் சேர மாட்டார்.
தனிக் கட்சி ஆரம்பிப்பார்
அவர் நல்லவர், நேர்மையானவர். இனிதான் அவர் புகழோ பணமோ சம்பாதிக்க வேண்டிய தேவை இல்லை. ஆகையால் எனக்குத் தெரிந்தவரையில் அவர் தனிக்கட்சிதான் ஆரம்பிப்பார். ஆனால் அவர் தனிக் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவர் சொல்வது போல் அவருக்கும் கடவுளுக்கும் மட்டும்தான் தெரியும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.