தீராத தமிழக அரசியல் குழப்பம்- சரிந்து போன தொழில்துறை உற்பத்தி: ரிசர்வ் வங்கி அறிக்கையில் பகீர்
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, மாநிலத்தின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, 1.65 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தால் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு பெரும் சரிவில் கிடப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.கவுக்குள், ஓபிஎஸ், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி என பல கோஷ்டிகள் ஏற்பட்டுள்ளன.
அதே போல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அதிமுக எனக்குதான் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சமர்ப்பித்தும் அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இது போதாது என்று முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தனிக்குழுக்கள் அமைத்துக்கொண்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார்கள். தங்களுக்கு மீண்டும் இலாகா ஒதுக்கீடு கேட்டும் அவர்கள் லாபி செய்துவருகிறார்கள்.
முடங்கிய அரசு நிர்வாகம்
இதனால், அரசைத் தொடர்ந்து நடத்துவதிலும் சிக்கல் நிலவுகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என, ஒவ்வொருவரும் தங்களுக்குள் கோஷ்டி சேர்ந்து செயல்படுவதால், மக்கள் நலப் பணிகளும், அரசு நிர்வாகப் பணிகளும் பெரிதும் தொய்வடைந்துள்ளன.
ரிசர்வ் வங்கி அறிக்கை
இதனை உறுதி செய்யும் வகையில், தற்போது தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றி ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.
சரிந்த தொழில்துறை உற்பத்தி
அதில், உற்பத்தித் துறைகளில் கடந்த 2016 ஏப்ரல் தொடங்கி, 2017 மார்ச் வரையான நிதியாண்டு காலத்தில், வெறும் 1.65 சதவீத வளர்ச்சியே ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது தமிழகப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஏறுமுகம் கண்ட ஆந்திரா, தெலுங்கானா
ஆனால் இதே சமயத்தில், அண்டை மாநிலங்களான ஆந்திராவில் உற்பத்தித் துறை 10.36 சதவீதமும், தெலுங்கானாவில் 7.1 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வேகமான வளர்ச்சி இந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலீடு செய்ய தயக்கம்
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பம் காரணமாக, இங்கு தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் முதலீட்டாளர்களிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், யாரிடம் அனுமதி வாங்குவது என்றும் யார் யார் லஞ்சம் கேட்பார்களோ என்ற அச்சமும் முதலீட்டாளர்களை முடக்கிப்போட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
இதனால், தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலத்திற்கு செல்ல தொடங்கியுள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்த சூழல் என்றும் குறிப்பிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
வசதிகள் இருந்தும் பலனில்லை
இந்திய அளவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருந்தாலும், தமிழகம் தற்போது ஆட்சி நிர்வாகத்தில் நிலவும் குழப்பத்தால் பாதிக்கப்பட்டு வருவதாக, ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.