வழக்கமான கூட்டம் இல்லை.. விற்பனையும் இல்லை.. புத்தகக்கண்காட்சியை பாதித்த பணத்தட்டுப்பாடு
இந்த ஆண்டு புத்தகக்கண்காட்சி சற்று மந்தமாகவே இருக்கிறது. முதல் சனி மற்றும் ஞாயிறு இரு தினங்களும் வழக்கமான கூட்டத்தைத் விட சற்று குறைவாக நேற்று இருந்தது. பணத்தட்டுப்பாடு பிரச்சனை புத்தகக்கண்காட்சியை பா
சென்னை: புத்தகக்கண்காட்சி 14 நாட்கள் நடைபெற்றாலும், சனி, ஞாயிறு, பொங்கல் விடுமுறை நாட்களில் விற்பதுதான் விற்பனை. விடுமுறை தினங்களில் நிற்கக் கூட இடம் இருக்காது. அவ்வளவு கூட்டம் கூடும். ஆனால், இந்த ஆண்டு, முதல் சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் கடந்துவிட்ட நிலையில் வழக்கமான கூட்டமும் இல்லை விற்பனையும் இல்லை.
ஆண்டு தோறும் நடக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சி தற்போது பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 700 கடைகளில் லட்சக்கணக்கான தலைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சிக்கு வேலை நாட்களில் வரமுடியாதவர்களும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களும் என அனைவரும் தேர்தெடுக்கும் நாட்கள் விடுமுறை நாட்கள்தான். அப்போது கூடும் கூட்டத்தில் மூச்சு கூட விடமுடியாது. மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை புத்தகச் சந்தையையும் விட்டு வைக்கவில்லை.
பணப் பிரச்சனை
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற நடவடிக்கையின் தொடர்ச்சியாகவும், பணத்தட்டுப்பாடு அதிகம் இருப்பதால் புத்தகக்கண்காட்சி வாசகர்கள் புத்தகம் வாங்குவது குறைந்திருப்பதாகவே கூறப்படுகிறது. ஆய்வாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர் உள்ளிட்ட சிலரைத் தவிர, எல்லா செலவுகளை செய்துவிட்டு கடைசி செலவாகத்தான் புத்தகத்தை பலர் வாங்குகிறார்கள். அப்படி இருக்க, இப்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு பிரச்சனையால் பெரும்பாலானவர்கள் புத்தகக்கண்காட்சிக்கு வந்தாலும் நூல்களை வாங்காமல், பார்த்துவிட்டு மட்டும் செல்கிறார்கள்.
மக்கள் ஆதரவு
பணத்தட்டுப்பாடு எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் புத்தகம் வாங்க வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இலக்கியம், அரசியல் சார்ந்த புத்தகங்களுக்கு இன்னமும் தேவை அதிகமாகவே இருக்கிறது. அதுதொடர்பான புத்தக விற்பனை நன்றாகவே உள்ளது என்கிறார் பதிப்பாளர் சிவ செந்தில் நாதன்.
வழக்கமான கூட்டம் எங்கே?
என்ன சொன்னாலும், இந்த ஆண்டு கூட்டம் குறைவுதான் என்கிறார் டிஸ்கவரி புத்தக விற்பனையாளர் சஞ்சய். வழக்கமாக விடுமுறை நாட்களில் நிமர்ந்து பார்க்கக் கூட நேரம் இல்லாமல் பில் போடுவோம். இந்த ஆண்டு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்கிறார் சஞ்சய்.
தொல்லை தரும் ஸ்வைபிங்
வந்தோமா, புத்தகத்தை தேர்வு செய்தோமா, பில் போட்டோமா, காசு கொடுத்தோமா என்று போக வாசகர்களால் முடியவில்லை. ஸ்வைபிங் கருவியில் தேய்த்து புத்தகம் வாங்க வேண்டிய சூழல் இருப்பதால், வாசகர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் நெட்வொர்க் சரியில்லாததால் ஸ்வைபிங் மிஷன் வேலை செய்யாமல் இருக்கின்றன. இரண்டு அல்லது 3 முறை கார்டுகளை தேய்க்க வேண்டியுள்ளது. அப்படியும் ஸ்வைபிங் மிஷன் வேலை செய்யாததால், தேர்வு செய்த புத்தகத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு ஏமாற்றத்தோடு செல்கின்றனர் வாசகர்கள்.
டோக்கன் முறை
சில்லறைத் தட்டுப்பாட்டை போக்குவதற்காக டோக்கன் முறை என்ற புதிய முறையை பபாசி நடைமுறைபடுத்தியுள்ளது. இது வாசகர்களுக்கு சற்று ஆறுதலை அளித்து வருகிறது. பபாசி அலுவலகத்தில் வாசகர்கள் சென்று தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து 50, 100 உள்ளிட்ட மதிப்புகளில் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த டோக்கன்களை கடைகளில் கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.
பொங்கல் விடுமுறை எதிர்ப்பார்த்து...
பெரிய அளவில் விற்பனை எதுவும் நடைபெறாததால், பொங்கல் விடுமுறைக்காவது மக்கள் திரள் கூடும், அப்போதாவது புத்தக விற்பனை சற்று அதிகமாக இருக்கும் என்று பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.