காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை.. வாக்குப் பதிவு மந்தம்
தஞ்சாவூர்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றவுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வாக்குப் பதிவு மந்தகதியில் நடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்து வருகிறது. பட்டுக்கோட்டை, மன்னார்குடி உள்பட சில இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. ஆனால் தஞ்சையில் மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் கோடை மழை பெய்து வருகிறது. திருவாரூரில் மிதமான மழை பெய்கிறது. திருத்துறைப்பூண்டியில் பலத்த மழை பெய்து வருகிறது. மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. நாகையில் இன்றும் மழை பெய்து வருகிறது. வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு விட்டு மழைபெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அங்கு உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் மழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று காலை தேர்தல் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. மேலும் மின்தடை ஏற்பட்டதால் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மையங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக உள்ளது.