அடங்காத கூத்து- சசி பொதுச்செயலராக வலியுறுத்திய "நேதாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலாம், தேவர், பிரணாப்"
நேதாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமிட்டவர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலராக வலியுறுத்திய கூத்து அரங்கேறியுள்ளது.
சென்னை: போயஸ் கார்டனை கூத்தாடும் இடமாக்கிவிட்டது மன்னார்குடி கோஷ்டி. நேதாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பிரணாப் முகர்ஜி என வேடமிட்டவர்கள் சசிகலாவை சந்தித்து அதிமுக பொதுச்செயலராக கோரிக்கை விடுத்ததுதான் லேட்டஸ்ட் கூத்து.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிகார மையமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது மன்னார்குடி கோஷ்டி. தமிழகம் முழுவதும் இருந்து லெட்டர்பேடு சங்கங்கள், கட்சிகளை சென்னைக்கு பேருந்துகளில் வரவழைக்கிறது மன்னார்குடி கோஷ்டி.
இந்த கும்பலும் சசிகலா எனும் சின்னம்மா நீங்கதான் அதிமுக பொதுச்செயலராக வேண்டும் என்று இருகை கூப்பி வேண்டுகோள் விடுக்கிறார். சசிகலாவோ தம்மை ஜெயலலிதா என நினைத்துக் கொண்டு கோரிக்கை மனுக்களை வாங்கி கொள்கிறார்.
ஜெயலலிதா மறைந்தது முதலே தினந்தோறும் இந்த காட்சிகளை அரங்கேற்றுகிறது மன்னார்குடி கோஷ்டி. இதில் உச்சபட்ச கூத்தாக இன்று நேதாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வேடமிட்டவர்கள் போயஸ் கார்டனுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களோடு நாட்டின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் ஜனாதிபதி கலாம் வேடமிட்டவர்களும் சசிகலாவை சந்தித்தார்.
இந்த மாபெரும் தலைவர்கள் சசிகலாவை பார்த்து கும்பிடு போட்டு அதிமுக பொதுச்செயலர் பதவி ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்ததுதான் காலக் கொடுமையாக இருக்கிறது. இன்னும் போயஸ் கார்டனில் என்னென்ன கூத்துகள் நடக்கப் போகிறதோ?
ஆமா அண்ணா, பெரியாரை எல்லாம் விட்டுட்டாங்கப்பா!