சட்டசபைக்கு அரபுநாட்டு கைதிபோல் பிடித்து வரப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.. துரைமுருகன் காட்டம்
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அரபுநாட்டு கைதிபோல் அதிமுக எம்எல்ஏக்கள் பிடித்து வரப்பட்டனர் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார்.
காஞ்சிபுரம்: பிப்ரவரி 18ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது திமுகவினர் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் துரைமுருகன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;
எடப்பாடி பழனிச்சாமி அமைத்த அமைச்சரவைக்கு நம்பிக்கைக் கோரி தீர்மானம் ஒன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானமே தப்பு. காரணம் இந்த அமைச்சரவையின் மீது இந்த மாமன்றத்தின் நம்பிக்கையை கோருகிறது என்று தீர்மானத்தில் இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் நம்பிக்கை வைத்து தெரிவிக்கவும் என்று இருந்தது.
அசாதாரண சூழல்
அசாதாரண சூழலை ஒரு ஆட்சி போய் இன்னொருவர் முதல்வராக பொறுப்பேற்று பலத்தை நிரூபிக்க நம்பிக்கை கோருவது அவசியம். அப்போது சட்டசபைக்கு வரும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக விடவேண்டும். அப்படி இல்லாமல், அதிமுக எஎம்எல்ஏக்கள் அனைவரும் சட்டமன்றத்திற்கு சுயமனப்பான்மையோடு வரவில்லை.
அரபு நாட்டு பிணைக் கைதிகள்
அரபு நாட்டு அடிமைகளை பிணைக் கைதிகளை பிடித்து வருவது போல், சட்டசபைக்கு எம்எல்ஏக்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்களை ஒரு தனிக்காட்டில் வைத்து போன்களை எல்லாம் பிடிங்கி வைத்துக் கொண்டனர். வேறு எதிலும் கவனம் சென்று விடாதபடி அவர்களுக்கு தேவையானவற்றை சப்ளை செய்து நேராக சட்டமன்றத்திற்கு கூட்டி வந்தார்கள். இது துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்குவதற்கு சமம்.
கோரிக்கை
எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். தங்களது மனைவி மக்களிடம் கூட பேச முடியாத அளவில் கட்டுப்பாட்டில் வைத்திருந்து வாக்கு வாங்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார். எனவே, இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைத்துவிட்டு ஒருவாரம் கழித்து நடத்த வேண்டும் என்று கோரினோம்.
மறுத்த சபாநாயகர்
இரண்டாவது கோரிக்கையாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினோம். மறைமுக தேர்தல் நடத்த சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லி சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது என்று துரைமுருகன் கூறினார்.