காவிரி: பிரதமர் அலுவலகம் முன்பு அதிமுக எம்பிக்கள் போராடாதது ஏன்?- துரைமுருகன்
மத்திய அரசை எதிர்த்தால் அடுத்த நாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சாடியுள்ளார்.
Recommended Video
சென்னை: மத்திய அரசை எதிர்த்தால் அடுத்த நாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சாடியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் தமிழக விவசாயிகள்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
பதவி இருக்காது
காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் பிரதமரை முற்றுகையிட்டிருக்கலாம் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். மத்திய அரசை எதிர்த்தால் அடுத்த நாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது என்றும் துரைமுருகன் கூறினார்.
வாக்கு சேகரிக்க முடியாது
ஸ்கீம் என்பது பற்றி கேட்க கடைசி நாளில் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகுவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் கர்நாடகாவில் பாஜக வாக்கு சேகரிக்க முடியாது என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.
அதிமுக எம்பிக்கள்
காவிரி பிரச்னையில் தற்போதைய நிலைக்கு மத்திய அரசுகளே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் பிரதமர் அலுவலகம் முன் அதிமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்தியிருக்கலாம், ஏன் செய்யவில்லை? என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
துணிச்சல் இல்லை
ஓபிஎஸ் ஈபிஎஸ் டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கேட்க வேண்டியதுதானே என்றும் துரைமுருகன் சாடியுள்ளார். மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடியும் நாளில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவதா? என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.