ஏன் இதை இப்போது பேசுகிறார் ஆளுநர்.. ஏதோ விஷயம் இருக்கு.. துரைமுருகன்
ஆளுநரின் பேச்சில் ஏதோ சூட்சுமம் உள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் துணை வேந்தர்கள் நியமனம் குறித்து ஆளுநர் ஏன் பேச வேண்டும், இதில் ஏதோ சூட்சுமம் இருப்பதுபோல உள்ளது என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர், கடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது என்று குற்றஞ்சாட்டியதுடன், தன்னுடைய நியமனத்தில் ஒரே ஒருவரைகூட குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆளுநரின் இந்த பேச்சினை திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். கோட்டூர்புரத்தில் துரைமுருகனை சந்தித்த செய்தியாளர்கள் ஆளுநர் பேச்சு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு துரைமுருகன், " இரண்டு துணைவேந்தர்களை நியமித்தபோது ஊழல் குறித்து வாயே திறக்காத ஆளுநர், தற்போது திடீரென, துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறார்.
தேர்தல் வரும் சமயத்தில் இப்படி ஆளுநர் கூறுவதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஆளுநர் சொல்வது, விடிவதற்கு முன் சேவல் கூவுவதுபோல் உள்ளது, ஆனால் என்னமோ நடக்கவிருக்கிறது என்பதை ஆளுநர் சூட்சமமாக உணர்த்தியிருக்கிறார்" என்றார்.
[ராஜஸ்தான், ம.பி, சட்டீஸ்கரில் பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்.. 'ஏபிபி' பரபர சர்வே]
இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "வராத மழைக்கு தேர்தலை தள்ளி வைப்பதற்கு பின்னணியில் ஏதோ நடக்கிறது" என்று துரைமுருகன் பதிலளித்தார்.