என் கடைசி ஆசை இதுதான்.. திமுகவின் கிராம சபை கூட்டத்தில் உருக்கமாக பேசிய துரைமுருகன்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டையில் நடந்த திமுக மக்கள் சபைக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் காட்பாடி தொகுதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைய வேண்டும் என தனது கடைசி ஆசை என்று தெரிவித்தார்.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள சீக்கராஜபுரத்தில் நடந்த திமுக மக்கள் சபைக் கூட்டத்தில் பேசியதாவது:
விவசாயிகளுக்கு, இலவச மின்சார திட்டத்தை கருணாநிதி அறிவித்தபோது, மின் துறை அமைச்சராக இருந்தவன் நான். விவசாய குடும்பத்தில் பிறந்த நான், இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும்போது, என் தாயின் காதில், மூக்கில், கழுத்தில் இருந்த நகைகள் இல்லாமல் போகும்.
மருத்துவமனையில் என் தாய் உயிரிழந்தபோது, ஒரு நகையும் அவரிடம் இல்லை. என் கடைசி ஆசை, காட்பாடி தொகுதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்பது தான் என் ஆசை.
தமிழகத்திலேயே இல்லாத அளவுக்கு, இலவச மருத்துவ சிகிச்சை, மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே என் கடைசி ஆசை. அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கிய மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் எதுவும் இயங்கவில்லை. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., கொடுத்த, 'டிவி' இன்னும் இயங்கி வருகிறது என்றார்.