நானே கிராமம் கிராமமாக போய் வேலை வாங்கித் தருவேன்.. சொல்வது துரைமுருகன்
காட்பாடி: காட்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கிராமத்திற்கு 10 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிடுகிறார். இங்கு அவரது வெற்றிக்காக அவரது மகன் கதிர் ஆனந்த் உள்பட திமுகவினர் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பொன்னை பஸ் நிலையத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் துரைமுருகன் பேசும்போது பல வாக்குறுதிகளை அளித்தார்.
அவரது பேச்சிலிருந்து:
நான் வெற்றி பெற்று என்னுடைய தலைவர் கருணாநிதி முதல்வர் ஆனதும் இந்த தொகுதியில், குறிப்பாக பொன்னை பகுதியில் ஏழை தாய்மார்களின் பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் படிக்க ஒரு அரசு கலைக் கல்லூரி கட்டுவேன்.
சேர்க்காடு பகுதியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வருவேன்.
லாலாப்பேட்டை பகுதியில் புதிய சிப்காட் அமைத்து அதில் உள்ளூர் பகுதி மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுப்பதுடன், நானே ஒவ்வொரு கிராமமாக சென்று அங்கு இருக்கும் 10 மாணவர்களுக்கு வேலை வாங்கி தருவேன் என்றார் துரைமுருகன்.