மோடியை மக்கள் 'போடி'ன்னு சொல்லிருவாங்க.. துரைமுருகன் அதிரடி!
ராணிப்பேட்டை: அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு மோடியை, மக்கள் போடி என்று சொல்லு விடுவார்கள். விஜயகாந்த் முற்றிலும் மார்க்கெட் இழந்து விடுவார். நான்காக உடைந்திருக்கும் காங்கிரஸ் அதற்குள் எட்டாக உடைந்து போய் விடும் என்று அதிரடியாக பேசியுள்ளார் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்.
ராணிப்பேட்டையில் நடந்த நகர திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
எனக்கு வாழ்க்கை கொடுத்தது ராணிப்பேட்டை. 1977 - 1980ம் ஆண்டு நான் இங்கு வெற்றி பெற்றேன். எம்.ஜி.ஆர். என்னை படிக்க வைத்தார். திருமணம் செய்து வைத்தார். திருமணத்துக்கு 25 பவுன் தங்க செயின் கொடுத்தார். ஆனாலும் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் நான் திமுகவில் இருந்தேன்.
வரும் 2016ம் ஆண்டு தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் நமக்குள் ஒற்றுமை வேண்டும். விஜயகாந்த் மார்க்கெட்டில் இல்லை. இப்போது நான்காகியிருக்கும் காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பு எட்டாகிவிடும். மோடியை மக்கள் போடி என்று சொல்லி விடுவார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு பஜனை பாடுவதற்கு கூட ஐந்து பேர் இல்லை.
அதிமுக தலைவருக்கு வழக்கில் தண்டனை நிச்சயம். அந்த கட்சி தலையில்லாத கட்சியாக போகிறது. நாம் எளிதாக வெற்றி பெறப்போகிறோம். 2016ல் வெற்றி நிச்சயம் என்று பேசினார் துரைமுருகன்.