இது என்ன கல்யாண வீடா? சும்மா உட்காருய்யா.. வைகோவை வாரிய துரைமுருகன்.. ரணகளத்திலும் குதூகலம்!
நக்கீரன் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட வைகோவை சந்திக்க சென்ற துரைமுருகன் அவரை கலாய்த்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நக்கீரன் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்த துரைமுருகன் அவரை கலாய்த்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்கீரன் ஆசிரியர் கோபால் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவரை சந்திக்க சென்றார். ஆனால் அவரை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.
மறுத்த போலீஸ்
வக்கீல் என்ற முறையில் என்னை நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் வைகோ. ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த போலீசார் நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடந்து வருவதால் தற்போது அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.[நக்கீரன் கோபால் கைதில் ஆளுநருக்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்.. என்ன காரணம்? ]
தரையில் அமர்ந்து தர்ணா
இதனால் ஆத்திரமடைந்த வைகோ போலீஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருந்த போதும் போலீசார் அவரை சட்டைசெய்யவில்லை. இதனால் வைகோ போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்
வைகோ கைது
போலீஸ் அதிகாரிகள் அவரை சமரசம் செய்ய முயன்றனர். எழுந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வைகோ அதை ஏற்கவில்லை.
இதனால் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக வைகோவை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார் வைகோ.
திமுகவினர் சந்திப்பு
அவரை திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் சந்தித்தனர். அப்போது வைகோவை சந்திக்க மேலும் பல நிர்வாகிகள் திருமண மண்டபத்திற்கு குவிந்த வண்ணம் இருந்தனர்.
கடுப்பாகி கலாய்த்த துரைமுருகன்
அவர்களை வைகோ எழுந்து நின்று வரவேற்றார். இதனால் கடுப்பான துரைமுருகன், யோவ் உட்காருய்யா, சும்மா கல்யாண வீடாட்டம் எழுந்து எழுந்து எல்லாரையும் வா.. வான்னுகிட்டு என கலாய்த்தார். இதனால் அந்த இடமே கலகலப்பாகி சிரிப்பலை எழுந்தது.