துர்கா ஸ்டாலின் முதல் மார்க்கரெட் தியாகராஜன் வரை... கணவர்களுக்காக களமிறங்கிய மனைவிகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தலைவர்களின் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. தேர்தலில் போட்டியிடும் கணவர்களுக்காக மனைவிகளும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் விஜயகாந்துக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பணம் செய்து வருகிறார் பிரேமலதா.
கொளத்தூர் தொகுதியில் துர்கா ஸ்டாலினும், பெண்ணாகரத்தில் சௌமியா அன்புமணியும், திருச்செந்தூரில் ராதிகா சரத்குமாரும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மதுரையில் புது வரவாக பிடிஆர் பழனிவேல் ராஜன் வீட்டு மருமகள் மார்க்கரெட் தியாகராஜன் கொஞ்சும் தமிழில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த சட்டசபை தேர்தல் மனைவிகளின் பிரச்சாரத்தால் களைகட்டியுள்ளது என்றே கூறவேண்டும்.
ராசாத்தி கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி செல்லும் இடமெல்லாம் கூடவே செல்கிறார் ராஜாத்தி அம்மாள். 93 வயதில் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் கருணாநிதிக்கு துணையாக செல்வதோடு, அவரது சூடான பேச்சை மேடையில் அமர்ந்து ஆர்வத்துடன் ரசிக்கிறார்.
பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்திற்காக தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றி வருகிறார் அவரது மனைவி பிரேமலதா. விஜயகாந்த் முதல்வரானால் முக்கிய பங்கு பிரேமலதாவிற்குத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
துர்கா ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியில் இரண்டாவது முறையாக களமிறங்குகிறார் ஸ்டாலின். அவருக்காக வாக்கு கேட்டு கொளத்தூரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஏறி இறங்குகிறார் துர்கா ஸ்டாலின். ஒவ்வொரு வாக்காளரையும் நேரடியாய் சந்தித்து வருகிறார் துர்கா.
சௌமியா அன்புமணி
அன்புமணி போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் வாடகை வீடே எடுத்து குடிவந்துவிட்டார் அவரது மனைவி சௌமியா. குக்கிராமங்கள் வரை எதையும் விடாமல் மொத்தமுள்ள 2,25,000 வாக்களர்களில் 2,00,000 லட்சம் பேரை சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். கூடவே அன்புமணியின் சகோதரியும் வாக்கு கேட்டு செல்கிறார்.
|
ராதிகா பிரச்சாரம்
சமக தலைவர் சரத்குமாருக்கு அவரது மனைவி ராதிகா சரத்குமார், திருச்செந்தூர் தொகுதியில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்துள்ளார். சீரியலில் பிஸியாக இருப்பதால் சில நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் வாக்கு சேகரிப்பார் ராதிகா.
மார்க்கரெட் தியாகராஜன்
நம்ம ஊர் மருமகள்தான் இப்படி என்று நினைத்துவிட வேண்டாம். தமிழ்நாட்டில் இருக்கும் மேல்நாட்டு மருமகள் ஒருவர் இந்த லிஸ்ட்டில் இணைந்து கலக்கி வருகிறார். மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனின் மனைவி 'மார்க்ரெட் தியாகராஜன்' தான் அது. 2007ம் ஆண்டு மார்க்ரெட்டுக்கும், தியாகராஜனுக்கும் திருமணம் ஆனதிலிருந்தே மதுரையில் தான் வசிக்கிறார் இந்த அமெரிக்க மருமகள்.
பிடிஆர் பழனிவேல் ராஜன் மருமகள்
முதலில் அமெரிக்காவில் குடியேறத்தான் திட்டமிட்டிருக்கிறார்கள். திமுகவின் முக்கிய முகமாக இருந்த தியாகராஜனின் தந்தை, பிடிஆர் பழனிவேல் ராஜன் இறந்தபிறகு இந்தியாவிற்கே வந்துவிட்டார்கள். அடக்கமான தமிழ்நாட்டு மருமகளாக மாறிவிட்ட மார்க்ரெட், இந்தத் தேர்தலில் போட்டியிடும் தன் கணவருக்காக வீதி வீதியாக ஓட்டு கேட்கும் அளவிற்கு டெவலெப் ஆகிவிட்டார்.
தமிழச்சியாக மாறிய அமெரிக்க பெண்
உன் தந்தையைப் போல் தமிழை வளர்த்துக்கொள். அப்போதுதான் அரசியலில் முன்னேற முடியும்" என தியாகராஜனுக்குக் கட்டளையிடும் அளவிற்கு தேறிவிட்டார் இந்த மேட் இன் அமெரிக்கா. அவர் எம்.எல்.ஏ ஆன பிறகு அவருக்கு உதவிகரமாய் இருப்பேன் என்று சொல்லும் மார்க்ரெட் முகத்தில் தமிழ் சாயம் தெரிகிறது.
தமிழில் பேசுவேன்
எனது கணவரின் அரசியல் பிரவேசம் புதியதல்ல. நாங்கள் சந்தித்து பழகிய காலம் முதலே எங்களது அன்றாட உரையாடல்களில் அரசியல் பேச்சு இருந்துள்ளது. முதலில் சில காலங்கள் அமெரிக்காவில் வாழ தீர்மானித்தோம். ஆனால், எனது மாமனாரின் மறைவுக்கு பின்னர் இங்கு வரவேண்டிய சூழல் உருவானது. எனக்கு சில தமிழ் வார்த்தைகள் தெரியும் என்கிறார் மார்க்கரெட்.
வாழ்க்கை துணையின் பிரச்சாரம்
தமிழக வாக்காளர்கள் தினம் முகம் விழிப்பது தங்கள் தொகுதி வேட்பாளர்களின் வாழ்க்கைத் துணைகள் முகத்தில்தான் என்கிற அளவுக்கு களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். அதே நேரத்தில் மனைவிகள் வேட்பாளராக இருந்தால் கணவர்களின் பிரச்சாரம் களை கட்டுகிறது.