தசரா பண்டிகை... நெல்லையில் மல்லிகைப் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
தசரா பண்டிகையையொட்டி, நெல்லையில் மல்லிகை பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
நெல்லை: நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை காரணமாக மல்லி விலை கடுமையாக உயர்ந்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளம்பியுள்ளது.
புரட்டாசி மாதம் முகூர்த்தம் இல்லாத நிலையிலும் நவராத்திரி பண்டிகை காரணமாக பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் மல்லிப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக ரூ.400 முதல் ரூ.500 வரை விற்ற ஒரு கிலோ மல்லிகை பூ மாலை ரூ.1000ஐ தாண்டியது. மல்லிகை பூ விலை உயர்வால் பிச்சி பூ விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தற்போது பிச்சி முதல் ரகம் ரூ.300லிருந்து ரூ.800க்கும், இரண்டாம் ரகம் ரூ.700க்கும் விற்பனையாகிறது.
இதுகுறித்து பூ மொத்த வியாபாரிகள் கூறுகையில், தற்போது மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் மானூர், ஆளவந்தான்குளம், செட்டிக்குறிச்சி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் மல்லிகை பூ சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக விளைச்சல் குறைந்ததால் வரத்தும் குறைந்துள்ளது. நவராத்திரி உற்சவம் மற்றும் தசரா பண்டிகை காரணமாக வீடுகள், கோயில்களில் மல்லிகை பூ, பிச்சி பூ தேவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக முகூர்த்தம் இல்லாத நிலையிலும் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து சரஸ்வதி பூஜை மற்றும் 10ம் நாள் பூஜை வரை பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.